முற்றும் மோதல்..வெங்கையா நாயுடு, மோகன் பகவத் ட்விட்டர் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கம் ஏன்? முழு தகவல்
டெல்லி: இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர்களின் கணக்குகளுக்கு வழங்கப்பட்டிருந்த ப்ளூ டிக் வசதி நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஏற்கனவே, மத்திய அரசின் புதிய டிஜிட்டல் விதிகள் தொடர்பான விஷயத்தில் ட்விட்டர் நிறுவனத்திற்கும் மத்திய பாஜக அரசுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
இன்னும் 15 நாட்களுக்குள் ட்விட்டர் நிறுவனம் மத்திய அரசின் புதிய டிஜிட்டல் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் இல்லையென்றால் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

வெங்கையா நாயுடு
இந்நிலையில், இன்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் கணக்கிற்கு வழங்கப்பட்டிருந்த ப்ளு டிக் வசதி நீக்கப்பட்டது சிக்கலை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. வெங்கையா நாயுடு இரண்டு ட்விட்டர் கணக்குகளைப் பயன்படுத்தி வருகிறார். அதில் ஒன்று வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட கணக்கு. மற்றொன்று, குடியரசு தலைவரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு.

மீண்டும் ப்ளூ டிக்
வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கிற்கு வழங்கப்பட்டிருந்த ப்ளூ டிக் வசதி தான் இன்று காலை நீக்கப்பட்டது. அந்த கணக்கில் வெங்கையா நாயுடுவை சுமார் 13 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். இது இணையத்தில் பெரும் சர்ச்சையானது. அதன் பின்னரே, மதியம் வெங்கையா நாயுடு ட்விட்டர் பக்கத்திற்கு ப்ளூ டிக் வசதி மீண்டும் வழங்கப்பட்டது.

ஆர்எஸ்எஸ் தலைவர்கள்
இந்நிலையில், அதைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், அந்த அமைப்பின் முக்கிய தலைவர்கள் சுரேஷ் சோனி, அருண்குமார், சுரேஷ் ஜோஷி மற்றும் கிருஷ்ணா குமார் ஆகிய 5 மூத்த தலைவர்களின் கணக்குகளுக்கு வழங்கப்பட்டிருந்த ப்ளூ டிக் வசதி நீக்கப்பட்டது. இதுவும் சர்ச்சையானது. ட்விட்டர் நிறுவனத்திற்கு எதிராக Ban twitter என்ற ஹேஸ்டேகும் உருவாக்கப்பட்டு டிரெண்டு செய்யப்பட்டது. எதிர்ப்புகள் அதிகரித்த நிலையில், மோகன் பகவத் ட்விட்டர் கணக்கிற்கு மீண்டும் ப்ளூ டிக் வழங்கப்பட்டுள்ளது.

ப்ளு டிக் என்றால் என்ன
ட்விட்டரை பயன்படுத்தும் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோரின் கணக்கை உறுதி செய்ய அந்நிறுவனம் ப்ளு டிக் வசதியை அளிக்கும். இருப்பினும், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் சில காரணங்களுக்காக ப்ளூ டிக் வெரிபிகேஷன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. சுமார் 3 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த ப்ளூ டிக் வெரிபிகேஷனை ட்விட்டர் நிறுவனம் தொடங்கியுள்ளது.

காரணம் என்ன
அதன்படி ஏற்கனவே ப்ளூ டிக் வெரிபிகேஷன் வழங்கப்பட்டிருந்த கணக்குகளையும் அந்நிறுவனம் பரிசீலனை செய்தது. அதில் கடந்த 6 மாதங்களில் குறைந்தபட்சம் ஒரு முறைகூட ட்விட்டர் தளத்தில் லாகின் செய்யாத கணக்குகளுக்கு ப்ளூ டிக் நீக்கப்பட்டன. அப்போதுதான் தவறுதலாக வெங்கையா நாயுடு, மோகன் பகவத் ஆகியோர் ட்விட்டர் கணக்குகளுக்கு வழங்கப்பட்டிருந்த ப்ளூ டிக் நீக்கப்பட்டிருக்கலாம்.

சரிபார்க்கப்பட்ட பிறகு
ப்ளூ டிக் நீக்கப்பட்ட அந்த இரு கணக்குகளிலும், கடைசி ட்வீட் பதிவிடப்பட்டு சுமார் 6 மாதங்களுக்கு மேல் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு, அவர்களின் கணக்குகளை manualஆக சரி பார்த்த பிறகு மீண்டும் ப்ளூ டிக் வசதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிருப்தி
ஆனால், ட்விட்டர் நிறுவனத்தின் இந்த பதிலை சிலர் ஏற்பதாக தெரியவில்லை. முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரின் கணக்குகளில் அவர்கள் உயிரிழந்த பின்னரும் ப்ளூ டிக் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளனர். ட்விட்டர் நிறுவனம் இதை வேண்டுமென்றே செய்வதைப் போலவே தெரிவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications