ரஷ்யாவை விட்டுக் கொடுக்காத இந்தியா.. மவுனம் சாதிக்கும் அமெரிக்கா! ஓ இது தான் காரணமா?.. பரபர பின்னணி
டெல்லி: உக்ரைன் மீது ரஷ்யாவின் போர் நடவடிக்கை விவகாரத்தில் இந்தியா நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்த போதிலும், அமெரிக்கா இதற்கு எதிர்ப்பு காட்டாமல் மவுனம் காத்து வருவது சர்வதேச அரங்கில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த மார்ச் 1ஆம் தேதி உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் உணவு வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்த 22 வயது இந்திய மாணவர் நவீன், ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் மீட்ப நடவடிக்கை துரிதப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்தியது.
மேலும், இந்தப் போரில் நடுநிலை நிலைப்பாட்டை எடுத்துள்ளது குறித்த கேள்விகளையும் எழுப்பி உள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என ரஷ்யத் தூதர் கடந்த வாரம் அறிவித்தார்.

உக்ரைன் போர்
இருந்த போதிலும், இந்தச் சம்பவம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியது. ரஷ்யாவுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மேற்கு உலக நாடுகள் விரும்புகின்றன. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் புதினை தொலைப்பேசி வழியாகத் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வலியுறுத்தினார். அதேபோல உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை தொடர்பு கொண்டும் பிரதமர் மோடி இதையே வலியுறுத்தினார்.

இந்தியா நடுநிலை
கடந்த பிப். 26இல் உக்ரைனில் ரஷ்யாவின் நடவடிக்கைகளை எதிர்த்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா உள்ளிட்ட 3 நாடுகள் மட்டுமே புறக்கணித்தது. இந்த தீர்மானத்தைப் புறக்கணித்த மற்ற நாடுகள் சீனா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகும். அதைத் தொடர்ந்து, மார்ச் 2இல் ஐ.நா பொதுச் சபையில் ரஷ்யாவுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தையும் ரஷ்யா மீண்டும் புறக்கணித்தது. இரண்டு நாட்களுக்குப் பிறகு, உக்ரைனில் நடந்த உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கக் கோரி ஐநா மனித உரிமைகள் கவுனிசில் கொண்டு வரப்பட்ட முக்கிய வாக்கெடுப்பில் இருந்தும் இந்தியா விலகியே இருந்தது.

இந்தியா ரஷ்யா உறவு
உக்ரைன் விவகாரத்தில் இந்தியா அமைதியாக இருப்பதற்குக் காரணங்கள் இருக்கத் தான் செய்கிறது. பல ஆண்டுகளாகவே இந்திய ராணுவத்தின் முக்கிய ஆயுத சப்ளையராக ரஷ்யா தான் உள்ளது. இப்போது இந்திய ராணுவத்திடம் இருக்கும் 70% ஆயுதங்கள் ரஷ்யாவிடம் இருந்து பெறப்பட்டவை. கடந்த 2016 முதல் 2020 வரை இந்தியா வாங்கிய ஆயுதங்களில் கிட்தட்ட சரிபாதி ரஷ்யாவில் இருந்து வாங்கப்பட்டவை என்கிறது ஸ்டாக்ஹோம் இன்டர்நேஷனல் பீஸ் ரிசர்ச் அமைப்பு! கடந்த டிசம்பர் மாதம் கூட 5 லட்சம் அதிநவீன கலாஷ்னிகோவ் துப்பாக்கிகள் உற்பத்தி மற்றும் ஒத்துழைப்புத் திட்டம் தொடர்பாக 10 வருட ஒப்பந்தங்களில் புதின் மற்றும் பிரதமர் மோடி கையெழுத்திட்டனர். ரஷ்யாவுடன் இணைந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகளைத் தயாரிக்கும் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா ஆதிக்கத்தைத் தடுக்கும் வகையில் S-400 வான் பாதுகாப்பு அமைப்பையும் ரஷ்யாவிடம் இருந்து வாங்கியுள்ளது.

புவிசார் அரசியல்
பாதுகாப்பைத் தாண்டியும் கூட இரு நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் பல உள்ளன. இந்தியாவில் மிகப் பெரிய அணுமின் நிலையத்தை ரஷ்யா கட்ட உள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 3ஆவது இடத்தில் இருக்கும் இந்தியாவுக்கு ரஷ்யாவின் உதவி நிச்சயம் தேவை. இவை தவிர நிலக்கரி, சமையல் எரிவாயு என பல்வேறு துறைகளிலும் இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், வரும் 2025க்குள் 3 மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார உறவுகள் மட்டுமின்றி, புவிசார் அரசியலிலும் இரு நாடுகளுக்கு இடையே நட்புறவைப் பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த சமயத்தில் சோவியத் ஒன்றியம் பல சந்தர்ப்பங்களில் இந்தியாவுக்கு உதவியது. தென்கிழக்கு ஆசியாவில் அமெரிக்காவின் ஆதிக்கம் அதிகரிக்காமல் இருக்க இந்தியாவின் வளர்ச்சி ரஷ்யாவுக்கு முக்கியமாக இருந்தது.

ரஷ்யா எப்போதும் ஆதரவு
சர்வதேச அமைப்புகளிலும் ரஷ்யா எப்போதும் இந்தியாவை உறுதியாக ஆதரித்துள்ளது. ரிச்சர்ட் நிக்சன் அமெரிக்க அதிபராக இருந்த காலத்தில், அமெரிக்கா சீனாவுடன் நெருக்கம் காட்டியது. இது இயல்பாக இந்தியாவை ரஷ்யா பக்கம் மேலும் நகர்த்தியது. எந்த காலத்திலும் இந்தியாவுக்கு உற்ற தோழனாகவே ரஷ்யா இருந்துள்ளது. 1971 பாக். போர் சமயத்தில் இந்தியாவை மிரட்ட அமெரிக்க அனுப்பிய போர்க்கப்பலைத் திரும்பப் பெற வைக்க இந்தியப் பெருங்கடல் பகுதிக்குத் தனது கடற்படையையே அனுப்பியது ரஷ்யா! இப்படி ஆபத்தான காலங்களில் என்றும் ரஷ்யா இந்தியாவைக் கைவிட்டதில்லை. இது ரஷ்யாவை அரசு ரீதியாக மட்டுமின்றி, பொதுமக்கள் பார்வையிலும் நட்பு நாடாக மாற்றுகிறது. இதன் காரணமாகவே பிரதமர் மோடி உட்பட எந்தத் தலைவராலும் ரஷ்யாவுக்கு எதிராக வெளிப்படையான நிலைப்பாட்டை எடுக்க முடிவதில்லை.

முதல்முறை இல்லை
ரஷ்யாவின் இந்தப் போர் நடவடிக்கையால் இந்திய மாணவர்கள் உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள போதிலும், பெரும்பாலான இந்தியர்கள் உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நடுநிலை முடிவை ஆதரிக்கவே செய்கின்றனர். அரசியல் ரீதியாகவும் எதிர்க்கட்சிகள் உட்பட எந்த கட்சியும் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. சர்வதேச அரங்கில் ரஷ்யாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்தியா மறுப்பது இதுவே முதல் முறையும் அல்ல. கடந்த 2014ஆம் ஆண்டு ரஷ்யா கிரிமியாவை இணைத்துக் கொண்ட போது, தீர்மானம் கொண்டு வரப்பட்ட போதும் காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு ஒதுங்கிக் கொண்டது. அதேபோல 1980இல், ஆப்கானிஸ்தான் மீதான சோவியத் யூனியனின் படையெடுக்கும் ஐ.நா. தீர்மானத்தையும் இந்தியா எதிர்த்தது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் எழுச்சி
சீனாவின் மின்னல் வேக எழுச்சியும் இந்தியா ரஷ்யா உடன் இந்தியா நெருக்கம் காட்டி வர மற்றொரு முக்கிய காரணமாக உள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே 1960கள் முதலே எல்லை விவகாரத்தில் பிரச்சினை உள்ளது. 1962 சீனா போருக்குப் பின்னர், இந்தியா சீனா உறவு சுமுகமாகவே இருந்தது. இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாகச் சீனா எல்லைப் பகுதியில் தனது ஆதிக்கத்தை அதிகப்படுத்துகிறது. இதனால் இந்தியாவில் அச்சம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவே இந்தியா தனது அணிசேராக் கொள்கையைத் தள்ளிவைத்துவிட்டு, அமெரிக்கா உடன் நட்பு பாராட்டு தொடங்கியது. அதேநேரம் சீனா மற்றும் ரஷ்யா உறவையும் இந்தியா தொடர்ந்து கண்காணித்தே வருகிறது.

அமெரிக்கா அமைதி
ரஷ்யா முழுவதுமாக சீனாவை நோக்கிச் சென்றால், அது இந்தியாவுக்குப் பேரழிவாக இருக்கும். இதன் காரணமாகவே ரஷ்யாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகள் போன்ற சர்வதேச தீர்மானங்களில் இந்தியாவால் உறுதியான முடிவுகளை எடுக்க முடியாமல் உள்ளது. இதன் காரணமாகவே பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த விவகாரத்தில் நடுநிலை எடுப்பதாக அறிவித்துள்ளது. இதே காரணத்திற்காகத் தான் இந்தியாவின் நடவடிக்கையையும் அமெரிக்காவால் எதிர்க்க முடிவதில்லை. சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்க தென்கிழக்கு ஆசியாவில் இந்தியா உடனான நல்லுறவு அமெரிக்காவுக்கு முக்கியம். இதன் காரணமாகவே இந்தியாவின் நடுநிலை முடிவுக்கு அமெரிக்கா எம்பிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் போதும், பைடன் அரசு அமைதி காத்து வருகிறது. அமெரிக்கா அரசு அதிகாரப்பூர்வமாக இதுவரை இந்தியா நடுநிலை நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

காரணம் இது தான்
சுருங்கச் சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவால் எப்படி ரஷ்யாவை இழக்க முடியாதோ, அதேபோல அமெரிக்காவாலும் இந்தியாவை இழக்க முடியாது. சர்வதேச அளவில் மிகப் பெரிய சவாலாக உருவெடுக்கும் சீனாவின் ஆதிகத்தை எதிர்கொள்ள ஒருவருக்கு மற்றொருவரின் உதவி தேவை. தற்போது பிரச்சினையில் ரஷ்யா பேசுபொருளாக மாறி இருக்கலாம். ஆனால், வரும் காலத்தில் அமெரிக்கா உட்பட அனைத்து மேற்குலக நாடுகளும் சீனா தான் முக்கிய அச்சுறுத்தலாக இருக்கும். எனவே சீனாவின் மீது கவனம் திரும்பும் போது, அமெரிக்காவிற்கு இந்தியா இன்றியமையாததாக இருக்கும். இதன் காரணமாகவே இந்தியாவின் நடுநிலை முடிவுக்கு அமெரிக்கா பெரிய எதிர்ப்பு காட்டவில்லை.












Click it and Unblock the Notifications