எப்பிடி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்... காசில்லை... கடனை கட்ட சொத்துகளை விற்கும் அனில் அம்பானி
டெல்லி: எரிக்சன் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய தொகையில் மேலும் 200 கோடி ரூபாயை திரட்ட ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் அசையா சொத்துக்களை விற்பனை செய்ய அனில் அம்பானி நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நடத்தி வந்த அனில் அம்பானி, நிறுவனம் நஷ்டமானதால் கடனாளியானார். 45,000 கோடி கடன் இருந்த நிலையில், அவரது சகோதரரான முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்சின் அலைவரிசை, கோபுரங்கள் உள்ளிட்டவற்றை 25,000கோடிக்கு வாங்க முன் வந்தார்.

ஆனால், நிலுவையில் உள்ள அலைவரிசை கட்டணம் 2,900 கோடி தொலை தொடர்பு துறைக்கு செலுத்தப்படவில்லை. தொலைத்தொடர்பு வர்த்தகத்தில் எரிக்ஸன் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்ட ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், அந்த நிறுவனத்துக்கு 1,600 கோடி தர வேண்டி இருந்தது.
நீதிமன்றம் சென்ற இந்த வழக்கில், தீர்வு காணப்பட்டு 550 கோடி பெற்றுக் கொள்ள எரிக்சன் ஒத்துக் கொண்டது. அம்பானி அதை வழங்காததால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று, தொகையை செலுத்துமாறு உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
4 வாரங்களுக்குள் எரிக்ஸன் நிறுவனத்துக்கு தொகை செலுத்தவில்லை என்றால், 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று அனில் அம்பானிக்கு கெடு விதித்துள்ளது. இதனையடுத்து உடனடியாக 260 கோடியை திரட்ட அனில் அம்பானி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இன்னமும் 200 கோடி ரூபாயை அனில் அம்பானி செலுத்த வேண்டும். இதனை திரட்ட உடனடியாக கையில் பணம் இல்லை என்று கூறப்படுகிறது. சகோதரரின் ஜியோ நிறுவனத்துக்கு ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் பொருட்களை விற்பனை செய்ததற்கு வர வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்துமாறு கோரியுள்ளார். அனில் அம்பானிக்கு சொந்தமான வேறு நிறுவனத்தின் சில சொத்துக்களை விற்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications