கொரோனா சிகிச்சை.. ரெமிடிஸ்வர் மருந்து விரைவில் கைவிடப்பட வாய்ப்பு.. டெல்லி மூத்த மருத்துவர் தகவல்
டெல்லி: இந்தியாவில் ரெமிடிஸ்வர் மருந்து விரைவில் கொரோனாவிற்கு எதிராக சிகிச்சையில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாக டெல்லியை சேர்ந்த மூத்த மருத்துவர் டிஎஸ் ராணா தெரிவித்துள்ளார்.
2020ல் கொரோனா தோன்றியதில் இருந்தே, உலகம் முழுக்க அதற்காக வெவ்வேறு சிகிச்சை முறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா தாக்கப்பட்டு இருக்கும் நபர்களுக்கு அவர்களின் அறிகுறியை வைத்து, அதற்கு ஏற்றபடி மருந்து அளிக்கப்படுகிறது.
ஆனால் எல்லாமே "டிரையல் அண்ட் எரர்" என்ற ரீதியில்தான் செய்யப்படுகின்றன. இந்த மருந்தை சில காலம் பயன்படுத்துவோம் என்று ஒவ்வொரு சிகிச்சை முறையாக கொரோனாவிற்கு எதிராக பயன்படுத்தி சோதனை செய்து வருகிறார்கள்.
ரெமிடிஸ்வர் மருந்து விற்பனை.. விரைவில் நேரு உள்விளையாட்டு அரங்கில் விற்க முடிவு.. தமிழக அரசு அதிரடி
மருந்து
முக்கியமாக தொடக்கத்தில் கொரோனாவிற்கு எதிராக பயன்படுத்தப்பட்ட ஹைடிராக்சிகுளோரோகுயின் மருந்துகள், பின் பயனளிக்கவில்லை என்று நீக்கப்பட்டது. ஹைடிராக்சிகுளோரோகுயின் மருந்துக்கு உலகம் முழுக்க பெரிய அளவில் தட்டுப்பாடு இருந்த உலக சுகாதார மையம் இதை சிகிச்சை முறையில் இருந்து நீக்கியது. அதன்பின் பிளாஸ்மா தெரபி சிகிச்சை முறை கொரோனாவிற்கு எதிரான ரட்சகனாக வர்ணிக்கப்பட்டது.
ரட்சகன்
இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் பிளாஸ்மா தெரபி தீவிரமாக செய்யப்பட்டு வந்த நிலையில், இதனால் யாரும் குணமடையவில்லை, இது பயனளிக்கவில்லை என்பது உறுதியானது. இதையடுத்து மத்திய அரசு இந்த பிளாஸ்மாதெரபி சிகிச்சை முறையை கைவிட்டது. அதேபோல் ஐவர்மெக்டின் மருந்துகளை பயன்படுத்துவதற்கும் உலக சுகாதார மையம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழகம்
இந்தியாவில் பல மாநிலங்களில் ஐவர் மெக்டின் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் உலக சுகாதார மையம் அதை எதிர்த்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் இந்தியாவில் ரெமிடிஸ்வர் மருந்து விரைவில் கொரோனாவிற்கு எதிராக சிகிச்சையில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாக டெல்லி கங்கா ராம் மருத்துவமனையை சேர்ந்த சேர்மேன் மற்றும் மூத்த மருத்துவர் டிஎஸ் ராணா தெரிவித்துள்ளார்.
பேட்டி
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ரெமிடிஸ்வர்மருந்து கொரோனாவிற்கு எதிராக செயல்படும் என்று எந்த ஆதாரமும் இல்லை. ஒரு மருந்தை நீண்ட காலம் பயன்படுத்தியும், அது கொரோனாவிற்கு எதிராக செயல்படவில்லை என்றால் அதை சிகிச்சை முறையில் இருந்து நீக்கிவிட வேண்டும். ரெமிடிஸ்வர் மருந்தையும் கொரோனா சிகிச்சை முறையில் இருந்து கைவிட வாய்ப்புகள் உள்ளது
பிளாஸ்மா
பிளாஸ்மா தெரபி பயன் அளிக்கவில்லை என்றதும் கைவிடப்பட்டது, அதேபோல்தான் ரெமிடிஸ்வர் மருந்தும். இந்த மருந்து கொரோனாவிற்கு எதிராக பலன் அளிப்பதாக எந்த ஆதாரமும் இல்லை, இதனால் விரைவில் இது நீக்கப்பட வாய்ப்புள்ளது என்று மருத்துவர் டிஎஸ் ராணா தெரிவித்துள்ளார். எய்ம்ஸ் தலைவர் மருத்துவர் ரன்தீப் குலேரியா அளித்த பேட்டியிலும், இந்த ரெமிடிஸ்வர் ஒன்றும் மேஜிக் மருந்து இல்லை. இதை சீக்கிரமே பயன்படுத்தினால் அது ஆபத்தில் கூட முடியும் என்று எச்சரித்து இருந்தார்.
வாய்ப்பு உள்ளது
இந்த மருந்துக்கு மக்களிடையே கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ரெமிடிஸ்வர் மருந்தை உலக சுகாதார மையம் பரிந்துரைக்கவில்லை. தமிழகம் போன்ற மாநிலங்களின் "அதிகாரபூர்வ" கொரோனா சிகிச்சை முறையில் ரெமிடிஸ்வர் இல்லை. இந்த நிலையில் தற்போது மூத்த மருத்துவர்கள் இப்படி கூறி வரும் நிலையில், ரெமிடிஸ்வர் மருந்தை விரைவில் கொரோனா சிகிச்சை முறையில் இருந்து மத்திய அரசு கைவிடும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.