ஷாக்! திடீரென காணாமல் போன "ஜனநாயகம்"! என்சிஇஆர்டி பாட பகுதியிலிருந்து அதிரடி நீக்கம்! காரணம் இதுதான்
டெல்லி: நாடு முழுவதும் விரைவில் கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளிகளுக்கு திரும்ப உள்ள நிலையில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT), மாணவர்களுக்கான பாடப்புத்தகத்தில் ஜனநாயகம், பரிணாம வளர்ச்சி போன்ற பாட பகுதிகளை நீக்கியுள்ளது.
என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை சிபிஎஸ்இ பின்பற்றி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில், சார்லஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாடு, முகலாயர்கள் என பாட பகுதிகள் நீக்கப்பட்டன. இது பெரும் சர்ச்சையாக வெடித்து கிளம்பியது. இதனை எதிர்த்து சுமார் 1,800 விஞ்ஞானிகள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தனர். இருப்பினும் இந்த பாட பகுதியை மீண்டும் சேர்ப்பது குறித்து மத்திய அரசு எதுவும் வாய்த்திறக்கவில்லை.

இந்நிலையில் மேலும் சில பாட பகுதிகளை என்சிஇஆர்டி நீக்கியுள்ளது. அதன்படி 6ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் உணவு பொருட்கள் உற்பத்தி, ஜனநாயகத்தின் முக்கிய கூறுகள், இந்தியாவின் காலநிலை மற்றும் வனவிலங்குகள் ஆகிய பாட பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. அதேபோல 7ம் வகுப்பு பாடத்திட்டத்தில், மத்தியப் பிரதேசத்தின் புலம்பெயர் பழங்குடியின மக்களின் போராட்டம், தவா மத்ஸ்ய சங்கம் மற்றும் பல சமத்துவத்திற்கான போராட்டங்கள் குறித்த பாட பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.
மேலும், முகலாய ஆட்சி தொடர்பான பாட பகுதிகள், 6, 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பாடப்பகுதியிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. 11ம் வகுப்பு மாணவர்களின் பாட திட்டத்தை பொறுத்த அளவில், வறுமை, அமைதி, வளர்ச்சி, பொருளின் நிலைகள், தனிம அட்டவணை பற்றிய பாட பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. 12ம் வகுப்பு பாட திட்டத்தில், குஜராத் கலவரம், பிரிவினையை புரிந்துகொள்வது, பனிப்போர் மற்றும் உயிரினங்களில் இனப்பெருக்கம் ஆகிய பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே பரிணாம வளர்ச்சி தொடர்பான பாட பகுதி நீக்கப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. மத்திய அரசு தொடர்ந்து அறிவியலுக்கு புறம்பான செயல்பாடுகளை ஆதரித்து வருவதாகவும், சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளதை உண்மையென கூறி வருவதாகவும் காங்கிரஸ், உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்நிலையில் தற்போது மீண்டும் ஜனநாயகம், சமத்துவத்திற்கான போராட்டம் போன்ற பாட பகுதிகள் நீக்கப்பட்டிருப்பது சலசலப்பை உருவாக்கியுள்ளது.

காரணம்: கொரோனா தொற்றுக்கு பின்னர் மாணவர்களின் பாட சுமையை குறைக்கும் விதமாக பல பாடப்பகுதிகள் வெட்டப்பட்டன. தற்போது, நவீன கல்வி கட்டமைப்புகளுக்கு ஏற்ப இந்த பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக என்சிஇஆர்டி கூறியுள்ளது. இவ்வாறு பாடப்பகுதிகள் நீக்கப்படுவது பகுத்தறிவு செயல்முறையின் ஒரு பகுதியாகும் என்றும் என்சிஇஆர்டி தெளிவுபடுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications