குடியரசு தின விழா.. டெல்லிக்கு விவிஐபி விருந்தினராக போகும் வால்பாறை பழங்குடியின தம்பதி
டெல்லி: நாட்டின் 75 ஆவது குடியரசு தின விழா நிகழ்வுகளில் பங்கேற்க வால்பாறை காடர் இன தம்பதி ராஜலட்சுமி - ஜெயபால் ஆகியோர் டெல்லி செல்ல உள்ளனர். டெல்லியில் வரும் 26ல் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்த தம்பதியினருக்கு சிறப்பு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
விஐபி விருந்தினர்களாக டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க போகும் இந்த தம்பதியினர் என்ன சாதனை செய்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம். ஆனைமலை தொடரில் வாழும் பழங்குடியினர் உரிமைக்காக பழங்குடி மக்களை ஒன்று திரட்டி தொடர்ந்து அறவழியில் போராடி நில உரிமை பெற்று தந்தவர் ராஜலட்சுமி. தனது கிராமத்தை இந்தியாவில் மிக சிறந்த முன்மாதிரி கிராமமாக மாற்றியுள்ளார். அவருடைய செயலுக்கு பக்கபலமாக இருந்து வழி காட்டியவர் இவரது கணவர் ஜெயபால்.

இந்த தம்பதியினரின் சாதனைகளை பாராட்டு விதமாக இருவரும் இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் மிக மிக முக்கியஸ்தர் என்ற பிரிவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க தமிழ்நாடு அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
விமானம் மூலம் இம்மாதம் வரும் 22 ம் தேதி டெல்லி செல்லும் இவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிப்ரவரி 2ஆம் தேதி தமிழ்நாடு திரும்புகின்றனர். நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த 75 ஆவது குடியரசு தின விழாவில் காடர் பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள இருப்பதால் ஆனைமலைத்தொடர் பழங்குடி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதனிடையே 75வது குடியரசு தின விழா பேரணியில் கலந்துகொள்ள தமிழக அரசின் அணிவகுப்பு ஊர்தி தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் குடியரசு தின விழா அலங்கார ஊர்தியில் உத்திரமேரூர் கல்வெட்டு காட்சிப்படுத்தப்பட உள்ளது. நான் முதல்வன், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் ஆகிய திட்டங்கள், 'அனைவருக்குமான நீதி' எனும் தலைப்பில் மனுநீதி சோழன் குறித்த ஊர்தி மற்றும் ஜனநாயகத்தின் அடையாளமான குடவோலை முறையைக் காட்சிப்படுத்தும் அலங்கார ஊர்திகள் இடம்பெற்று உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications