குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள எகிப்து அதிபர் அல் சிசி வருகை! டெல்லியில் உற்சாக வரவேற்பு
டெல்லி: குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள அதிபர் அல் சிசி நேற்று மாலை தலைநகர் டெல்லி வந்தார். விமானம் மூலம் டெல்லி வந்த அவருக்கு நமது நாட்டின் நாட்டுப்புற நடனக் குழுவினரின் இசை நிகழ்ச்சியுடன் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
நமது நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு மற்றும் சுதந்திர தினம் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படும். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று டெல்லியில் குடியரசுத் தலைவர் தேசியக் கொடியை ஏற்றுவார்.
அதேபோல சுதந்திர தினத்தன்று பிரதமர் டெல்லியில் தேசியக் கொடியை ஏற்றுவார். மேலும், ஒவ்வொரு ஆண்டும் குடியரசு மற்றும் சுதந்திர தினத்தில் வெளிநாட்டின் முக்கிய தலைவர்கள் இதில் கலந்து கொள்வார்கள்.

எகிப்து அதிபர் இந்தியா வருகை
இந்தியாவின் 74ஆவது சுதந்திர தினம் நாளை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்தாண்டு குடியரசு தின விழா நிகழ்ச்சியில் எகிப்து அதிபர் அல் சிசி கலந்து கொள்வார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. நமது நாட்டின் சுதந்திர தின விழாவில் எகிப்து நாட்டை சேர்ந்த அதிபர் கலந்து கொள்வது இதுவே முதல்முறையாகும். இதனிடையே குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள அதிபர் அல் சிசி நேற்று மாலை தலைநகர் டெல்லி வந்தார்.

குடியரசுத் தலைவருடன் சந்திப்பு
விமானம் மூலம் டெல்லி வந்த அவருக்கு நமது நாட்டின் நாட்டுப்புற நடனக் குழுவினரின் இசை நிகழ்ச்சியுடன் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அதிபர் அல் சிசியுடன் அந்நாட்டின் எகிப்து அமைச்சர்கள், உயர் அதிகாரிகளும் இந்தியா வந்துள்ளனர். மொத்தம் நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அல் சிசி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களையும் சந்திக்க உள்ளார்.

பிரதமர் மோடி
இன்று (ஜன.25) தினம் குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் செல்லும் அல் சிசி அங்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்கிறார். அங்கு அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரை அங்கேயே சந்தித்துப் பேச உள்ளார். மேலும், டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் ராஜ்காட் நினைவிடத்திற்கும் சென்று மரியாதை செலுத்த உள்ளார்.

குடியரசு தின விழா
பிரதமர் மோடியைச் சந்திக்கும் அல் சிசி, இருதரப்பு உறவுகள் குறித்தும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தியத் தொழிலதிபர்களைச் சந்திக்கும் எகிப்து அதிபர், தங்கள் நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்க உள்ளார். அதைத் தொடர்ந்து நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, நமது நாட்டின் முப்படைகளின் அணிவகுப்புகளைப் பார்வையிடுகிறார். இந்த அணிவகுப்பில், எகிப்தின் ராணுவ குழுவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications