டெல்லி குடியரசு தின விழாவுக்கு... கடும் கட்டுப்பாடுகள்... 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நோ என்ட்ரி!
புதுடெல்லி: இந்தியாவில் உருமாறிய கொரோனா அச்சறுத்தி வருவதால் வருகிற ஜனவரி 26-ம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின விழாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கபப்ட்டுள்ளன.
அணிவகுப்பை பார்வையிட 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது. கலாச்சார நிகழ்ச்சிகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது.
குடியரசு தின வரலாற்றில் முதல் முறையாக இந்த ஆண்டு அணிவகுப்பு செங்கோட்டையில் முடிவடையாது. விஜய் சவுக்கில் தொடங்கும் அணிவகுப்பு தேசிய மைதானத்தில் முடிவடையும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அச்சறுத்தல்
உலகம் முழுவதும் கொரோனா ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியாவில் முன்பை விட தற்போது கொரோனா பாதிப்பு பெருமளவு குறைந்து ஆறுதல் அளிக்கிறது. ஆனால் உருமாறிய கொரோனா புதிய அச்சுறுத்தலாக உள்ளது.
கட்டுப்பாடுகள்
நமது நாட்டின் குடியரசு தின ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா களைகட்டும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குடியரசு தின விழாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அரசு நெறிமுறைகளை விதித்துள்ளது.
செங்கோட்டையில் இல்லை
அந்த நெறிமுறைகள் பின்வருமாறு:- வழக்கமாக குடியரசு தின அணிவகுப்பு செங்கோட்டை ராஜபாதையில் நடைபெறும். ஆனால் குடியரசு தின வரலாற்றில் முதல் முறையாக இந்த ஆண்டு அணிவகுப்பு விஜய் சவுக்கில் தொடங்கி தேசிய மைதானத்தில் முடிவடையும்.
அணிவகுப்பு தூரம் குறைப்பு
மேலும், இந்த அணிவகுப்பின் தூரம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. எப்போதும் பல்வேறு குழுக்களின் குடியரசு தின அணிவகுப்பு 8.2 கி.மீ ஆக இருக்கும். தற்போது அணிவகுப்பின் தூரம் 3.3 கி.மீ. ஆக குறைக்கப்பட்டுள்ளது. குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் அணிகள் மற்றும் பங்கேற்பாளர்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும். மேலும் ஒவ்வொரு படைப்பிரிவில் 144 வீரர்கள் அணிவகுப்பில் பங்கேற்பர். ஆனால் இந்த முறைஒவ்வொரு படைப்பிரிவில் 96 வீரர்கள் மட்டுமே பங்கேற்பார்கள்.
15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நோ
குடியரசு தின அணிவகுப்பை பார்வையிடும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் 1,15,000 முதல் 25,000 வரை குறைக்கப்பட்டுள்ளது, இந்த அணிவகுப்பை பார்வையிட 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது. வரும் குடியரசு தின விழாவில் கலாச்சார நிகழ்ச்சிகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது.
வீரர்களுக்கு கொரோனா
குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க சமீபத்தில் டெல்லிக்குச் சென்ற சுமார் 150 ராணுவ வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், அவர்கள் அனைவரும் டெல்லி கன்டோன்மென்ட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.இந்த குடியரசு தின விழாவில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
போரிஸ் ஜான்சன் வருவாரா?
ஆனால் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் போரிஸ் ஜான்சன் இந்தியாவுக்கு வருவாரா என்ற கேள்வி எழுந்தது. அவர் குடியரசு தின விழாவில் கலந்து கொள்வார் என வெளியுறவு அமைச்சகம் கடந்த வாரம் தெளிவுபடுத்தியது குறிப்பிடத்தக்கது.