ஓய்வுக்கு 6 வாரம் முன் விஆர்எஸ்.. ட்விஸ்ட் கொடுத்த ஐஏஎஸ்! தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம்
டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் ஆணையராக விருப்ப ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அருண் கோயல் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
இந்தியாவின் சுயாதீன அமைப்புகளின் முதன்மையானதாக கருதப்படுவது தேர்தல் ஆணையம். அரசியல் கட்சிகளை கட்டுப்படுத்துவது, நாடாளுமன்ற தேர்தல், மாநில தேர்தல்களை நடத்துவது தேர்தல் ஆணையத்தின் பணி.
நாட்டின் ஆட்சியாளர்களை தீர்மானிக்கும் தேர்தலை நடத்தும் மகத்தான பணி தேர்தல் ஆணையத்தை சார்ந்தது. இந்த தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் உள்ளார்.

அருண் கோயல்
அவருக்கு அடுத்து தேர்தல் ஆணையராக அனுப் சந்திர பாண்டே பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் புதிய தேர்தல் ஆணையராக அருண் கோயலை மத்திய சட்ட அமைச்சகம் நியமித்து உள்ளது. இவரது நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கி இருக்கிறார்.

அடுத்தடுத்து தேர்தல்
ஹிமாச்சல பிரதேச சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்து, குஜராத் மாநில சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு விரைவில் நடைபெற இருக்கிறது. அடுத்த மாதம் 2 மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. அதை தொடர்ந்து கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன.

முக்கியத்துவமான நியமனம்
2024 ஆம் ஆண்டே நாடே எதிர்பாக்கும் மக்களவைத் தேர்தலும் நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில் அருண் கோயலின் இந்த நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது. அருண் கோயல் 1985 பஞ்சாப் கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். இவர் மத்திய கனரக தொழிற்சாலை அமைச்சகத்தின் செயலாளராக பதவி வகித்து வந்தார்.

விருப்ப ஓய்வு
நவம்பர் 31 ஆம் தேதியுடன் ஓய்வுபெற இருந்த அருண் கோயல் 6 வாரங்களுக்கு முன்பாக ஓய்வுபெறுவதாக கூறி தன்னுடைய வி.ஆர்.எஸ். கடிதத்தை வழங்கினார். இவரது விருப்ப ஓய்வு கடிதம் கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அரசால் ஏற்கப்பட்டது. அவருக்கு மாற்றாக 1991 உத்தரப்பிரதேச பிரிவு கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரி கம்ரான் ரிஸ்வி மத்திய கனரக தொழிற்சாலை அமைச்சகத்தின் பொறுப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications