வல்லரசு நாடுகளை ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ்.. ஸ்தம்பித்த உலக பொருளாதாரம்.. கிலி கிளப்பும் 2020!
டெல்லி: கொரோனா எனும் கொடும் அரக்கன் 200-க்கும் மேற்பட்ட உலக நாடுகளை துவம்சம் செய்து அவற்றின் பொருளாதாரத்தையே கேள்விக்குறியாக்கியதை இன்று நினைத்தாலும் பகீர் என்கிறது.
Sars Cov 2 எனும் கொரோனா வைரஸ் கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவில் பரவியது. அங்கு ஹூபேய் உள்ளிட்ட மாகாணங்களில் அதிக பாதிப்பையும் உயிரிழப்பையும் ஏற்படுத்தியது. நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் பாகங்களை செயலிழக்க வைக்கும் இந்த வைரஸ் தொற்று நோய் என உலக சுகாதார அமைப்பால் பெயரிடப்பட்டது.
தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவிய இந்த கொரோனா உலகளவில் 5.70 கோடிக்கும் மேற்பட்டோருக்கு பரவியுள்ளது. இதுவரை உலகளவில் 13 லட்சம் பேர் பலியாகிவிட்டனர்.

மாஸ்க்
இந்த வைரஸிலிருந்து நம்மை பாதுகாக்க சமூக இடைவெளி, அடிக்கடி கைக் கழுவுதல், மாஸ்க் அணிவது ஆகிய முத்தான 3 விஷயங்களை சொல்லிக் கொடுத்தது. மேலும் கொரோனா பரவலை தடுக்க அந்தந்த நாட்டு அரசுகள் லாக்டவுனை அறிவித்தன. இந்த அறிவிப்பால் பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், போக்குவரத்து முதல் குண்டூசி தயாரிக்கும் நிறுவனங்கள் வரை மூடப்பட்டன.

தொழிற்சாலைகள்
பொதுவாக ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம் தொழிற்சாலைகள், தொழில்கள். இவை முடங்கியதால் பொருளாதாரம் கடுமையாக பாதித்தது. மேலும் 3 வகையான போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டதால் ஏற்றுமதி, இறக்குமதியின்றி ஒவ்வொரு நாடும் தவித்தன.

இந்தியா
இதனால் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வேலையிழப்புகள் அதிகரித்தன. பல இடங்களில் ஆட்குறைப்புடன் சம்பள குறைப்பும் நடந்தது. இதனால் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அந்தந்த நாடுகளின் பாதிப்புக்கேற்ப சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

பணிக்கு வருதல்
குறைந்த ஊழியர்கள், வீட்டிலிருந்து பணியாற்றுவது, ஒரு நாள் விட்டு ஒரு நாள் பணிக்கு வருவது உள்ளிட்ட சில தளர்வுகளை அறிவித்ததால் பொருளாதாரம் கடுகளவேனும் உயரும் என்பதால் இது போன்ற தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. என்னதான் கொரோனா குறைந்தாலும் திடீரென உயருவதால் மக்களிடையே அச்சம் நிலவுகிறது. இதில் இரண்டாவது அலையும் வீசும் என கூறுகிறார்கள். இப்படி கண்ணுக்கே புலப்படாத வைரஸ் 2020-ஐ ஆட்டி படைத்ததை யாராலும் மறக்கவே முடியாது.












Click it and Unblock the Notifications