வேக்சின் + தளர்வுகள்.. நாட்டில் 5 வாரத்தில் 60% அதிகரித்த பஸ் போக்குவரத்து.. இதிலும் சென்னை டாப்தான்
டெல்லி: இந்தியாவில் கொரோனா ஊரடங்கு தளர்வுகள் மற்றும் வேகமெடுக்கும் வேக்சின் பணிகள் ஆகியவை காரணமாக கடந்த 5 வாரங்களில் மட்டும் பேருந்துகளில் பயணிப்போரின் எண்ணிக்கை 60% வரை அதிகரித்துள்ளதாக அபிபஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மக்கள் அதிகம் பயணிக்கும் நகரங்களில் ஒன்றாகச் சென்னை உள்ளது.
நாட்டில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா 2ஆம் அலை நாட்டில் உச்சக்கட்ட கொரோனா பாதிப்பை ஏற்படுத்தியது. தினசரி வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருந்தது.
அந்த சமயத்தில் மத்திய அரசு எந்தவொரு கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை என்றாலும்கூட கிட்ட தட்ட அனைத்து மாநில அரசுகளும் ஊரடங்கு அல்லது அதற்கு இணையான தடை உத்தரவைப் பிறப்பித்திருந்தது.

பொது போக்குவரத்து தடை
இதனால், அனைத்து மக்களும் வீடுகளிலேயே முடங்கினர். கொரோனா 2ஆம் அலை சமயத்தில் பொதுப் போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. இது தனியார் பேருந்து துறையில் பெரும் சிக்கலை உருவாக்கியது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்ததால், பல்வேறு மாநிலங்களும் ஊரடங்கில் தளர்வுகளை அறிவிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பேருந்தில் பயணிப்பவர்கள், குறிப்பாக மாநிலங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்து கணிசமாக உயர்ந்துள்ளது.

60% அதிகம்
ஜூன் மாதம் தொடங்கிக் கடந்த ஐந்து வாரத்தில் மட்டும் பஸ் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை 60% அதிகரித்துள்ளது. ஐந்து வாரத்தில் மட்டும் 4.5 லட்சம் பேர் தங்கள் தளத்தில் பஸ் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளதாகப் பிரபல ஆன்லைன் பஸ் டிக்கெட் முன்பதிவு இணையதளம் அபிபஸ் (Abhibus) தெரிவித்துள்ளது. தடுப்பூசி பணிகள் வேகமாக நடைபெறுவதும், ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளும் இதற்கு முக்கிய காரணம் என அபிபஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

6 நகரங்கள்
குறிப்பாகப் பெங்களூரு, ஹைதராபாத், புனே, விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர், சென்னை ஆகிய ஆறு நகரங்களுக்குப் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இப்போது வரை அலுவல் ரீதியாக மற்றும் அத்தியாவசிய காரணங்களாகப் பயணிப்போரின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. அதேநேரம் பல மாதங்களுக்குப் பிறகு சுற்றுலா, ஆன்மீகம் போன்ற அத்தியாவசியமற்ற பயணங்களும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக அபிபஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி
பேருந்தில் பயணிப்பவர்களில் 55% பேர் முழுவதுமாக 2 டோஸ் வேக்சின் போட்டவர்கள் என்றும் 32% குறைந்தது ஒரு டோஸ் வேக்சின் போட்டவர்கள் என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. கொரோனாவுக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடும் போது, இப்போது பேருந்தில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு என்றாலும்கூட இது வரவேற்கத்தக்க ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

நல்ல விஷயம்
இது குறித்து அபிபஸ் நிறுவனத்தின் சிஓஓ ரோஹித் சர்மா கூறுகையில், "நாடு முழுவதும் சுற்றுலா போன்ற கரணங்களுக்குப் பணிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது போக்குவரத்துத் துறைக்கு மட்டுமின்றி சுற்றுலாத் துறைக்கும் ஒரு நல்ல விஷயம். வேக்சின் பணிகள் வேகமெடுத்துள்ளதால், மக்கள் நம்பிக்கையுடன் வெளியே செல்ல தொடங்கியுள்ளனர். தற்போதைய சூழ்நிலையில், வாடிக்கையாளர் பாதுகாப்பே முக்கியம் என்பதால் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றி, வேக்சின் செலுத்துவதை ஊக்குவித்து வருகிறோம்" என்றார்.

ஊரடங்கு தளர்வுகள்
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை சமயத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை ஒவ்வொரு மாநிலமும் படிப்படியாக நீக்கி வருகிறது. தெலங்கானா அரசு முதல் மாநிலமாக அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நீக்கியுள்ளது. அதேநேரம் தமிழ்நாடு தொடங்கி பல்வேறு மாநிலங்களில் அத்தியாவசியமற்ற சேவைகளுக்குக் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. நாட்டில் கொரோனா அச்சம் முழுமையாக விலகிவிடவில்லை என்பதால் தளர்வுகளை அறிவிக்கும்போது, உச்சபட்ச கவனத்துடன் செயல்பட வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications