தமிழக மின்வாரியத்துக்கு கடன்...விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்தாகுமா!!
டெல்லி: கடனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ரூ. 20,000 கோடி அளவிற்கு கடன் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
மின்சாரம் வாங்கிய வகையில் பல்வேறு நிறுவனங்களுக்கு தமிழக மின்வாரியம் 18,068 கோடி ரூபாய் ஏற்கனவே செலுத்த வேண்டி உள்ளது. இது நிலுவையில் உள்ளது. நாட்டிலேயே ராஜஸ்தான் மாநிலம்தான் முதல் இடத்தில் உள்ளது. இந்த மாநிலம் மட்டும் இதுவரை மின்சாரம் வாங்கிய வகையில் ரூ. 35,156 கோடிக்கு கடன் பாக்கி வைத்துள்ளது. இதற்கு அடுத்த படியாக தமிழ்நாடு உள்ளது.

இந்த நிலையில்தான் கொரோனா காலத்தில் மீண்டு வருவதற்கு கடனில் இருக்கும் மாநிலங்களுக்கு ரூ. 90 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் தெரிவித்து இருந்தார். ஆனால், சில நிபந்தனைகளையும் விதித்து இருந்தார். அதாவது. மின்சார வாரியம் தனியார்மயம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து போன்ற நிபந்தனைகளையும் வைத்து இருந்தார். மேலும், மின்சார திருட்டு, மின்சாரம் வீணாவது போன்றவற்றுக்கு மின் விநியோகஸ்தர்கள் பதில் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பல்வேறு மாநிலங்களும் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளன. அந்த வகையில் ரூ. 673 கோடி அளவிற்கு மாநிலங்கள் கடன் கேட்டுள்ளன. ஆனால், கடன் கொடுப்பதில் தாமதம் ஏற்படுவதற்கு காரணம் மாநிலங்கள்தான் என்று கூறப்படுகிறது. கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருப்பதால், மாநிலங்களால் எளிதில் கடனை பெற முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில், கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழகம் வந்த மத்திய எரிசக்தி அமைச்சர் ஆர்.கே.சிங்கிடம், ரூ. 20 ஆயிரம் கோடி அளவிற்கு தமிழக அரசு கடன் கேட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்திற்கு உறுதியாக ரூ. 20 ஆயிரம் கோடி கடன் கிடைக்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்தக் கடன் கிடைக்க வேண்டுமானால், மத்திய அரசின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டும். இலவச மின்சாரம் தருவதை நிறுத்திவிட்டு, மானியம் வழங்கும் நடைமுறையை தமிழகத்திடம் மத்திய அரசு வலியுறுத்தலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications