வீடு வாங்குவோருக்கு பட்ஜெட்டில் காத்திருக்கும் கலக்கல் அறிவிப்பு?ரியல் எஸ்டேட் துறை எதிர்பார்ப்புகள்
டெல்லி: ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஆண்டு பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா பரவல் காரணமாக அனைத்து துறைகளும் மோசமாகப் பாதிக்கப்பட்டன. அப்படி அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்றான ரியல் எஸ்டேட் துறை கடந்த ஆண்டு வலுவான ஒரு கம்பேக்கை கொடுத்தது.
டாப் நகரங்களில் 2019ஆம் ஆண்டு விற்பனை செய்யப்பட்ட வீடுகளில் சுமார் 90% கடந்த ஆண்டும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஓமிக்ரான் கொரோனா என்ன மாதிரியான பாதிப்பைத் தரும் என்பது தெரியாத நிலையில், இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரியல் எஸ்டேட் துறைக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வரிவிலக்கு
இது தொடர்பாக அனராக் குழுமத்தின் தலைவர் அனுஜ் பூரி கூறுகையில், "வீடு வாங்க விரும்புவோருக்கு எளிதில் கடன், ஜிஎஸ்டி குறைப்பு போன்ற முக்கிய கோரிக்கைகளைத் தாண்டி ரியல் எஸ்டேட் துறை வேறு சில உதவிகளையும் அரசிடம் எதிர்பார்க்கிறது. இது தொடர்பாக வரும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானால் அது ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்குப் பெரியளவில் உதவும். வீட்டுக் கடன் வட்டியின் மீதான வருமான வரி விலக்கைக் குறைந்தபட்சம் ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். இது குறைந்த மற்றும் நடுத்தர விலையுள்ள வீடுகளின் தேவையை அதிகரிக்கும்" என்றார்

உயர்த்த வேண்டும்
வீட்டுக் கடன் வட்டியின் மீதான வட்டிக்குக் கொடுக்கப்படும் ரூ.2 லட்சம் வரிச்சலுகையை ரூ.5 லட்சமாக அதிகரிக்க வேண்டும் என்பதே ரியல் எஸ்டேட் துறையில் உள்ள அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. அப்படி வரிச்சலுகையை மாற்றி அமைத்தால், அது அதிகப்படியான நடுத்தர வர்க்கத்தினரின் வீடு வாங்கும் கனவை நிறைவேற்ற உதவும். அரசின் இந்த முடிவு வீடுகளின் தேவையை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன், கடந்த சில ஆண்டுகளில் டெவலப்பர்களுக்கு ஏற்பட்ட இழப்பையும் சரி செய்ய முடியும் என அத்துறையில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசு செய்யுமா
வரி குறைப்பு அல்லது வரி விகிதங்களை மாற்றியமைத்து தனிநபர் வரி விலக்கை அதிகரிக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. ஏனென்றால் 80C மூலம் பெறப்படும் வரிவிலக்கு (ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சமாக) 2014க்கு பின்னர் உயர்த்தப்படவில்லை. வரி குறைப்புக்கு இது சரியான நேரம் என்றாலும் கூட அரசு இதைச் செய்யுமா எனத் தெரியவில்லை என அனுஜ் பூரி தெரிவித்தார். அதற்குப் பதிலாக கொரோனா பெருந்தொற்றால் போராடும் சிறு குறு தொழில்களை ஊக்குவிப்பதிலும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் அரசு அதிக கவனம் செலுத்தலாம் என்றும் அனுஜ் பூரி தெரிவித்தார்.

நிபந்தனை
இதுபோன்ற வரிச் சலுகைகளைப் பெறும் குறைந்த விலை வீடுகள் என்பது வீட்டின் அளவு, விலை மற்றும் வாங்குபவரின் வருமானம் ஆகியவற்றை கொண்டு வரையறுக்கப்படும். பெருநகரங்களில் 60 சதுர மீட்டர் வீடுகளும், மற்ற ஊர்களில் 90 சதுர மீட்டருக்குள் உள்ள வீடுகள் குறைந்த விலை வீடுகளாகக் கருதப்படும். அனைத்து பகுதிகளிலும் இதன் விலை ரூ. 45 லட்சத்தைத் தாண்டக் கூடாது என்ற கட்டுப்பாடும் உள்ளது. அதேபோல வீட்டை வாங்கும் நபர்களின் வருமானத்தைப் பொறுத்தும் வங்கிகள் இதை வரையறுக்கிறது.

மாற்ற வேண்டும்
இந்நிலையில் பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கும் வகையில் ஒவ்வொரு நகரத்திற்கும் ஒவ்வொரு விலை வரம்பை நிர்ணயம் செய்ய வேண்டும் எனப் பூரி வலியுறுத்தியுள்ளார். ஏனென்றால் மும்பையில் ரூ 45 லட்சத்திற்குள் வீடுகளை வாங்குவது மிக மிகக் கடினம். மும்பையில் இந்த உச்ச வரம்பை ரூ 85 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் மற்ற முக்கிய நகரங்களிலும் இதை ரூ 60 முதல் 65 லட்சம் வரை உயர்த்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இது வீடு வாங்க நினைப்போருக்குப் பிடித்த வீட்டைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

நீட்டிப்பு
ANAROCK ஆய்வின்படி நாட்டில் உள்ள முக்கிய 7 நகரங்களில் குறைந்த விலை வீடுகள் என்பவை மொத்த விநியோகத்தில் 26%ஆக இருந்தது. மத்திய அரசின் கடந்த பட்ஜெட்டில், வீட்டுக் கடன் மீதான வருமான வரி விலக்கு கூடுதலாக ரூ. 1.5 லட்சம் வரை பெறலாம் என்பது மார்ச் 31, 2022 வரை நீட்டிக்கப்பட்டது. இதனால் குறைந்த விலை பெரிய அளவில் ஊக்கம் பெற்றது. இந்த சலுகையை இன்னும் சில காலம் நீட்டித்தால் அது நடுத்தர வர்க்கத்தினருக்குப் பெரியளவில் உதவும் என ரியல் எஸ்டேட் துறையினர் வலியுறுத்துகின்றனர்.

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்
அதேபோல வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்குச் சொத்து பரிவர்த்தனைகளில் பிடித்தம் செய்யப்படும் TDSஐ அரசு குறைக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்துகின்றனர். இந்த TDS தொகை ஒவ்வொரு சர்க்கிளிலும் ஒவ்வொரு ரேட்களில் உள்ளதாலும் TDS ரீஃபன்ட் வரவும் தாமதமாவதால் இந்த நடவடிக்கை தேவை என வலியுறுத்தப்படுகிறது. இதுபோல ரியல் எஸ்டேட் துறைக்குப் பல விதமாக எதிர்பார்ப்புகள் உள்ள நிலையில், இவை நிறைவேறுமா என்பது பிப்.1இல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications