RSS: “ஆர்எஸ்எஸ் வரலாற்றைப் பற்றி பெருமைப்படுகிறேன்” சுதந்திர தின உரையில் பிரதமர் நெகிழ்ச்சி
டெல்லி: 79வது சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் வரலாற்றைப் பற்றி பெருமைப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார்.
"ஆர்எஸ்எஸ் 100 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. இது எப்போதும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஈடுபட்டிருந்தது. ஆர்எஸ்எஸ் இந்தியாவின் சேவைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய தன்னார்வ தொண்டு நிறுவனம். ஆர்எஸ்எஸ்-இன் வரலாற்றைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன்" என்று பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

முன்னதாக புவனேஸ்வரில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், "இந்தியர்கள் சுதந்திரத்தைப் பற்றி அலட்சியமாக இருக்கக்கூடாது, சுதந்திரத்தை 'உயிர்ப்புடன்' வைத்திருக்க கடினமாக உழைத்து தியாகங்கள் செய்ய வேண்டும்.
நமது முன்னோர்கள் தியாகங்களைச் செய்து இந்தியாவின் சுதந்திரத்தை பெற்று தந்திருக்கிறார்கள். நாமும் அதை உயிருடன் வைத்திருக்கவும், நாட்டை தன்னம்பிக்கை கொண்டதாகவும், 'விஷ்வ குரு' ஆகவும் மாற்றுவதற்கும் கடினமாக உழைக்க வேண்டும். சண்டையில் ஈடுபட்டுள்ள உலகிற்கு வழிகாட்ட வேண்டும்" என்றார்.
ஆர்எஸ்எஸ் தனது நூற்றாண்டு விழாவை ஆகஸ்ட் 26 முதல் கொண்டாட திட்டமிட்டுள்ளது. 'சங் யாத்ரா - 100 ஆண்டுகள்' என்ற தலைப்பில் அதன் 100 ஆண்டுகளைக் குறிக்கும் முக்கிய நிகழ்வு, ஆகஸ்ட் 26 முதல் ஆகஸ்ட் 28 வரை டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெறும்.
இந்த காலகட்டத்தில், மோகன் பகவத் சமூகத்தின் பல்வேறு பிரிவினருடன் கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்ற கலந்துரையாடல்கள் பிற நகரங்களிலும் நடைபெறும் - நவம்பரில் பெங்களூருவிலும், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் கொல்கத்தா மற்றும் மும்பையிலும் நடைபெறும். இந்த நிகழ்வுக்கு அனைத்து நாட்டின் தூதர்கள் அழைக்கப்படுவார்கள், ஆனால் பாகிஸ்தான், துருக்கி மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் தூதர்களை அழைக்க வேண்டாம் என்று ஆர்எஸ்எஸ் முடிவு செய்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. ஆர்எஸ்எஸ் ஒரு பெரிய மக்கள் தொடர்பு திட்டத்தையும் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications