முடிவுக்கு வரும் RTI சட்டம்? மறுபரிசீலனை செய்ய மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை பரிந்துரை!
டெல்லி: தகவல் அறியும் உரிமை சட்டத்தை (RTI) மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரை மூலம் சட்டம் முடிவுக்கு வருகிறதோ? என்கிற அச்சமும் எழுந்திருக்கிறது.
கடந்த 2005ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்தில், சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கை பரிந்துரைத்துள்ளது.

காரணங்கள் என்ன?
இதற்கான காரணங்களாக சிலவற்றை மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. அதாவது, ரகசிய அறிக்கைகள் மற்றும் வரைவு கருத்துக்களை வெளிப்படுத்துவது, அரசாங்கத்தின் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதாக ஆய்வு அறிக்கை கூறுகிறது. அதேபோல இந்த சட்டம், வெறும் வேடிக்கை பார்க்கும் ஆர்வத்திற்காக உருவாக்கப்படவில்லை. ஊழலை குறைக்கவும் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கவும் மட்டுமே இது கொண்டுவரப்பட்டது என்று மத்திய அரசு கூறுகிறது.
பாதுகாக்கப்பட வேண்டும்
அதிகாரப்பூர்வமான முடிவுகள் எடுக்கப்படும் வரை, அதிகாரிகள் தங்களுக்குள் கலந்துரையாடும் குறிப்புகள் மற்றும் வரைவு தாள்களை வெளியிடுவதில் விளக்கு அளிக்க வேண்டும் என்றும் அரசு பரிந்துரைக்கிறது. இதில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்றும், அறிக்கை வலியுறுத்துகிறது. அதன்படி ஊழியர்களின் இடமாற்றம் மற்றும் ரகசிய பணி அறிக்கைகள் தொடர்பான தகவல்களை, பொது நலன் கருதி அல்லாமல் கேட்கப்படும் சாதாரண கோரிக்கைகளில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்துகிறது.
மறுக்கும் அதிகாரம்
சில குறிப்பிட்ட தகவல்களை வெளிப்படுத்துவது, நிர்வாகத்தை பாதிக்கும் எனில், நாடாளுமன்ற மேற்பார்வையின் கீழ் அமைச்சர்கள் அந்த தகவலை மறுக்கும் அதிகாரத்தை வழங்கலாம் என்றும் அரசு கூறுகிறது. ஒவ்வொரு வரைவு அல்லது குறிப்பும் பொது வெளியில் வரும் எனில் அதிகாரிகள் தைரியமான யோசனைகளை முன்வைக்க தயங்குவார்கள், இது நிர்வாகத்தின் தரத்தை குறைக்கும் என அரசு எச்சரிக்கிறது.
மேற்கோள் காட்டிய அரசு
மத்திய அரசு, மற்ற நாடுகளில் இந்த சட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது? என்பது குறித்தும் மேற்கோளிட்டிருக்கிறது. முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேயர், இந்த சட்டத்தை கொண்டு வந்ததற்கு பின்னர் வருந்தினார். முக்கியமான விஷயங்களில் ரகசியமாக விவாதிக்க முடியாவிட்டால் ஒரு அரசாங்கத்தை நடத்த முடியாது என்று அவர் குறிப்பிட்டதை ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டி இருக்கிறது.
உண்மையான காரணம் என்ன?
மத்திய அரசு, இந்த சட்டத்திற்கு எதிராக பேசுவதற்கு முக்கியமான காரணங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது, தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்தெந்த நிறுவனங்கள்.. எவ்வளவு நிதியை.. பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு வழங்கின? என்பதை RTI சட்டம் தான் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. இந்த தகவல்களை வைத்து எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தை நாடி இந்த திட்டத்தையே அதாவது தேர்தல் பத்திரங்களின் திட்டத்தை ரத்து செய்ய வைத்தன.
RBI எச்சரிக்கை
அதேபோல, பணமதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு முன்பு.. ரிசர்வ் வங்கியின் இயக்குனர்கள் குழுவிடம் ஆலோசிக்கப்பட்டதா? என்பது குறித்து ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்டபோது.. மத்திய அரசு எதிர்பார்த்த அளவுக்கு கருப்பு பணம் திரும்பாது என்று RBI எச்சரித்திருந்தது RTI மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.
பிரதமர் நிவாரண நிதி, ஒரு பொதுவான அமைப்பா? தனியார் அமைப்பா? என்பது குறித்து ஆர்டிஐ கேள்விக்கு தெளிவான பதில் அளிக்கப்படாதது பெரும் விவாதங்களை ஏற்படுத்தி இருந்தது. இது அரசின் வெளிப்படை தன்மை குறித்து விமர்சனங்களை உருவாக்கியிருந்தது.
அதேபோல நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது என்ற 'என்எஸ்எஸ்ஓ' அறிக்கையை அரசு வெளியிட தாமதித்த போது, ஆர்டிஐ மூலம் அந்த தரவுகள் வெளியாகி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருந்தன. இது தவிர, பெரும் தொழிலதிபர்களின் வாரா கடன்கள் எவ்வளவு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது? என்கிற விவரங்கள் ஆர்டிஐ மூலம் வெளியாகி எதிர் கட்சிகள் அரசுக்கு எதிராக நெருக்கடியை கொடுத்தன.
ஆக, மத்திய அரசு RTI சட்டத்தை மறுபரிசீலனை செய்ய உண்மையான காரணமே இந்த விஷயங்கள்தான் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.












Click it and Unblock the Notifications