தொடரும் இந்தியா-ரஷ்யா உறவு.. பாசத்தோடு திரெளபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்த விளாடிமிர் புதின்
டெல்லி: நாளை இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக திரெளபதி முர்மு பதவியேற்க உள்ள நிலையில் இந்தியா-ரஷ்யா இடையேயான உறவு மேற்கொள்காட்டி அவருக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய ஜனாதிபதியாக உள்ள ராம்நாத் கோவிந்தின் 5 ஆண்டு பதவிக்காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரெளபதி முர்முவும், காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிட்டனர்.

ஜனாதிபதியாகும் திரெளபதி முர்மு
இவர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார். கடந்த 18 ம் தேதி நாடு முழுவதும் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இந்த ஓட்டுகள் 21ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜகவின திரெளபதி முர்மு வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் நாட்டின் 15வது ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ளார்.

நாளை பதவியேற்பு
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் இன்று முடிவடைய உள்ளதால் நாளை நாட்டின் புதிய ஜனாதிபதியாக திரெளபதி முர்மு பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த விழாவில் பங்கேற்க அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் திரெளபதி முர்முவுக்கு வாழ்த்துகள் குவிய தொடங்கி உள்ளது.

திரெளபதி முர்முவுக்கு புதின் வாழ்த்து
இதன் ஒருபகுதியாக திரெளபதி முர்முவுக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‛‛சுதந்திர இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக தேர்வாகி உள்ள திரெளபதி முர்முவுக்கு வாழ்த்துகள். இந்தியாவுடன் சிறப்பு உறவு வைத்துள்ளோம். இந்த வேளையில் இந்தியாவின் தலைவராக உங்களின் செயல்பாடு என்பது ரஷ்யா-இந்தியா இடையேயான உரையாடல் மற்றும் உறவின் வளர்ச்சியையும், நட்பு நாடுகளின் நலனை பாதுகாக்கும் வகையிலான பல்வேறு துறைகளுக்கான உற்பத்திகளையும் ஊக்குவிக்கும் என நம்புகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார். இதனை ரஷ்யாவுக்கான இந்திய தூதரகம் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
Recommended Video

இந்தியா-ரஷ்யாவின் உறவு எப்படி?
இந்தியா-ரஷ்யா இடையே நல்ல உறவு காலம்காலமாக தொடர்ந்து வரகிறது. இந்தியாவின் ராணுவ தளவாடங்கள் அதிகளவில் ரஷ்யாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனை தாண்டி உலக அரங்கில் எப்போதும் இந்தியாவை, ரஷ்யா விட்டு கொடுத்தது இல்லை. காஷ்மீர் விவகாரத்தில் ரஷ்யா எப்போதும் இந்தியாவின் பக்கம் தான் உள்ளது. இதனால் தான் உக்ரைன் மீதான போரால் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை பல நாடுகள் எடுத்தாலும் இந்தியா தொடர்ந்து நடுநிலையில் உள்ளது. பேச்சுவார்த்தை மூலம் உக்ரைன்-ரஷ்யா இடையேயான பிரச்சனையை தீர்க்க வேண்டும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம், பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications