சட்டத்தை பின்வாசல் வழியாக பயன்படுத்துவதா?.. சபரிமலை வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்
டெல்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்கிற நீதிமன்ற தீர்ப்புக்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. மூத்த வழக்கறிஞர் சாய் தீபக் கோயில் வழிபாட்டு முறைகளில் நீதிமன்றம் தலையிட முடியுமா என்று உச்ச நீதிமன்றத்தில் அனல் பறக்கும் வாதத்தில் ஈடுபட்டார். அடுக்கடுக்காக எழுப்பிய கேள்விகளால் நீதிபதிகள் ஆடிப்போயுள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்கள் நுழையலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை மறுஆய்வு செய்ய கோரி பல்வேறு தரப்பில் இருந்து வழக்குகள் தொடரப்பட்டன. கோயில்களின் பாரம்பரிய வழிபாட்டு முறையில் நீதிமன்றம் தலையிட முடியாது. கடவுளை எப்படி வழிபடுவது என்பது பக்தர்களின் உரிமை என்று உச்ச நீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் அமர்வு கூறியிருந்தது.

சபரிமலை கோயில் தீர்ப்பு
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட வழக்கு விசாரணையில், மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பந்தளம் அரச குடும்பம், பக்தர்கள் அமைப்புகள் சார்பில் வழக்கறிஞர் சாய் தீபக் ஆஜரானார். கோயில் வழிபாட்டு முறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதை நிரூபிக்க அவர் 3 மணி நேரம் வாதாடினார்.
நீதிமன்றத்தில் சாய் தீபக், இந்திய அரசியலமைப்பின் 25 மற்றும் 26ஆம் கட்டுரைகள் மத சுதந்திரத்தையும், மத அமைப்புகள் தங்கள் வழிபாட்டு முறைகளை நிர்வகிக்கும் உரிமையை உறுதி செய்கின்றன. எனவே, ஒரு மதத்தின் பாரம்பரிய சடங்குகள் மற்றும் வழிபாட்டு நடைமுறைகளை நீதிமன்றம் பரிசீலனை செய்வது பொருத்தமல்ல.
சட்டத்தை பின்வாசலாக
ஒவ்வொரு கோயிலும் அந்தக் கோயிலின் தெய்வத்தின் தன்மை மற்றும் பழமையான மரபுகளின் அடிப்படையில் வழிபாட்டு முறைகளை பின்பற்றுகின்றன. பக்தர்கள் தங்கள் விருப்பப்படி வழிபாட்டு முறைகளை மாற்றக் கோர முடியாது. ஒரு மதத்தின் வழிபாட்டு முறையை நீதிமன்றம் தீர்மானிக்க முடியாது. அது அந்த மதத்தின் அடையாளத்துடன் இணைந்த ஒன்று.
மத நடைமுறை மற்றும் புனித தன்மை நீதிமன்றத்தில் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது. அந்த நடைமுறையை ஆய்வு செய்யும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு கிடையாது. நேரடியாக செய்ய முடியாததை மறைமுகமாக செய்ய முடியாது. பகுத்தறிவு தன்மையை சோதிப்பதற்காக நீதிமன்றங்கள் சட்டத்தை பின் வாசல் வழியாக பயன்படுத்த கூடாது என்றார்.
நீதிபதிகள் கேள்வி
அதற்கு நீதிபதிகள், ஒரு நடைமுறை மதத்தின் பெயரில் பாதுகாக்கப்படுகிறதா அல்லது அது அடிப்படை உரிமைகளை மீறுகிறதா என்பதை யார் தீர்மானிப்பது. அரசின் ஒரு அங்கத்தை நீங்கள் விமர்சிக்கும்போதே நீதித்துறை மறு ஆய்வுக்கான அதிகாரம் வந்துவிடுகிறது. எல்லைகள் உள்ளன என்பதை புரிந்துள்ளோம். அதிகாரம் இல்லை என்பது தவறு என்றனர்.
அதற்கு சாய் தீபக், அரசு எல்லையை தாண்டினால் நீதித்துறை மறு ஆய்வு அவசியமாகிறது. எந்த மதப்பிரிவும் தீண்டாமையை பின்பற்றும் உரிமையை கோர முடியாது. சட்டம் என்ன சொல்ல வேண்டும் என்கிற பாதையில் நாம் செல்லும்போது, நாம் கொள்கை முடிவெடுக்கும் எல்லைக்குள் நுழைகிறோம் என்று வாதிட்டார். இதேபோல திருவிதாங்கூர் தேவஸ்வம் மற்றும் பல்வேறு பிரிவினர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. வழக்கு இன்று மீண்டும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications