"தர்காவுக்கு செல்லும்போது தலையை மூடிக்கொள்கிறோம் தானே!" சபரிமலை விவகாரத்தில் மத்திய அரசு வாதம்
டெல்லி: அனைத்து வயது பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனுமதிப்பது தொடர்பான 2018 உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரும் மனுக்கள் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நிலையில், மத்திய அரசு சில முக்கிய வாதங்களை முன்வைத்தது.
கேரளா மாநிலத்தில் உள்ள உலக புகழ்பெற்ற சபரிமலைக்கு ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் இருந்து பல லட்சம் பக்தர்கள் ஐயப்பனைத் தரிசிக்க வருகிறார்கள். இதற்கிடையே சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் ஐயப்பன் கோயிலில் அனுமதிப்பது தொடர்பான 2018 உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரும் மனுக்களை இன்றைய தினம் உச்ச நீதிமன்றம் விசாரித்தது..

9 நீதிபதி அமர்வு
இதற்காக 9 நீதிபதிகள் கொண்ட அமர்வைக் கடந்த சனிக்கிழமை உச்ச நீதிமன்றம் அறிவித்தது. சபரிமலை சீராய்வு வழக்கு விசாரணையை ஏப்ரல் இறுதிக்குள் முடிவுக்குக் கொண்டுவர இந்த அமர்வு திட்டமிட்டுள்ளது. கேரள சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் அனுமதிக்கப்பட்ட 2018 தீர்ப்பு தொடர்பான ரிட், சீராய்வு மனுக்கள் இந்த வழக்கில் அடங்கும். ஆறு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, இந்த விவகாரம் மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது.
இதில் மனுதாரர்கள் வாதிட ஏப்ரல் 7-9 தேதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர் தரப்பினருக்கு ஏப்ரல் 14-16 விசாரணை நாட்களை ஒதுக்கியுள்ளது. ஏப்ரல் 21ம் தேதி மறுவிளக்கங்களை அளிக்கலாம். தொடர்ந்து அமிகஸ் கியூரியின் இறுதி வாதங்கள் ஏப்ரல் 22 அன்றும் நடைபெறும். நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவை அனைத்து தரப்பினரும் பின்பற்ற நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
மத்திய அரசு வாதம்
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மத நடைமுறை என்பதை நீதிமன்றங்களால் தீர்மானிக்க முடியுமா என மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கேள்வி எழுப்பினார். மத விவகாரங்களில் நீதிமன்றங்களுக்கு நிபுணத்துவம் உள்ளதா என்றும் அவர் சந்தேகம் கிளப்பினார். தனது வாதத்தைத் தொடர்ந்து முன்வைத்த அவர், உச்ச நீதிமன்றத்திற்கு இந்த விவகாரத்தில் உள்ள அதிகார வரம்பைச் சுட்டிக்காட்டினார். அத்தியாவசிய நடைமுறைகளை அடையாளம் காண, மத நூல்களையும், மாறிவரும் நம்பிக்கை அமைப்புகளையும் ஆழமாக ஆராய வேண்டும் என்றார்.
மத நடைமுறை
அவர் மேலும் கூறுகையில், "நீதிமன்றத்தால் அத்தியாவசியத் தன்மையை எப்படி ஆராய முடியும்? இது போன்ற விவகாரங்களில் நீதிமன்றங்களுக்குத் தேவையான ஆழமான புரிதல்கள் இல்லாதிருக்கலாம். பல விஷயங்களை நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும்.. ஆனால், இதில் நீதிமன்றத்திற்கு நிபுணத்துவம் உள்ளதா என்பதே முக்கிய கேள்வி. மதங்களின் பன்முகத்தன்மையையும், பல பிரிவுகளையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். நடைமுறை என்ன, சட்ட ஒழுங்கு மற்றும் அரசியலமைப்பு உரிமைகள் மீறப்படுகிறதா என்பதை நாம் ஆராய வேண்டும்" என்றார்.
மேலும், அனைத்து அரசியலமைப்பு கேள்விகளையும் பாலின பாகுபாடு என்ற பார்வையிலேயே பார்க்கக் கூடாது என்றும் தெரிவித்தார். அவர் மேலும், "கடந்த 10 ஆண்டுகளாக ஒவ்வொரு அரசியலமைப்பு விதியும் பாலின அடிப்படையிலேயே பார்க்கப்படுகிறது. ஆனால், அனைத்து விதிகளும் அப்படியான நோக்கத்துடன் உருவாக்கப்படவில்லை.. இது ஒரு புதிய போக்காக இருக்கிறது.
பாலின பாகுபாடு இல்லை
சபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது விவகாரத்தில் பாகுபாடு இல்லை. அரசியலமைப்பின் விதி 14 அனைவருக்கும் சமத்துவத்தை உறுதி செய்கிறது. விதி 15, பாலினம் உட்பட எந்த அடிப்படையிலும் பாகுபாடு காட்டுவதைத் தடை செய்கிறது. அடிப்படை உரிமைகள் அனைவருக்கும் சமமாக உள்ளன. அனைத்து மத நடைமுறைகளையும் தனிப்பட்ட விருப்பம் சார்ந்த பிரச்சினைகளாகக் கட்டமைக்க முடியாது.. ஒவ்வொரு பிரிவின் நடைமுறையையும் நாம் மதிக்க வேண்டும்.
ஒரு தர்கா அல்லது குருத்வாராவுக்கு செல்லும்போது தலையை மூடிக்கொள்ள வேண்டியிருந்தால்.. அது எனது கண்ணியம், உரிமை அல்லது விருப்பத்தைப் பறிப்பதாக நான் சொல்ல முடியாது. சபரிமலையில் உள்ள வழிபாட்டு முறை என்பது பாரம்பரியத்தில் வேரூன்றி இருக்கிறது.. இது பாகுபாடு எனக் கருத முடியாது" என்றார்.
கடந்து வந்த பாதை
கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி கேரள சபரிமலை கோயிலில் 10 முதல் 50 வயதுடைய பெண்கள் நுழைய விதிக்கப்பட்ட தடையை முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு ரத்து செய்தது. இது அரசியலமைப்பின் 25வது பிரிவை மீறுவதாகவும், 1965 விதிகளின் 3(b) சட்டவிரோதமானது எனவும் 4:1 பெரும்பான்மையுடன் அமர்வு தீர்ப்பளித்தது. அப்போது அமர்வில் இருந்த ஒரே பெண் நீதிபதியான இந்து மல்ஹோத்ரா மட்டும் பெண்கள் சபரிமலையில் அனுமதிக்கப்படுவதை எதிர்த்தார். மத மரபுகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்றார். அவரது மாறுபட்ட கருத்து, மறு ஆய்வு வாதங்களுக்கு அடிப்படையாக அமைந்தது.












Click it and Unblock the Notifications