சச்சினுக்கு பெரிய நஷ்டம்.. ஆனா பாருங்க அதே விஷயத்தில் டாடாவுக்கு 5 மடங்கு லாபம்! அது எப்படி
டெல்லி: இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் பிரபல ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்திருந்த நிலையில், அதில் அவருக்கு நஷ்டம் ஏற்படப் போகிறது. அதேநேரம் நாட்டின் மிகப் பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான டாடாவுக்கு இதில் 5 மடங்கு லாபம் கிடைத்துள்ளது. டாடாவை விடவும் இதில் மற்றொரு தொழிலதிபர் அதிக லாபம் பார்க்கப் போகிறார். அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகிறது. அவற்றில் பல நிறுவனங்கள் சந்தையில் வெற்றிகரமாகவும் இருந்து வருகிறது.

மேலும், சில ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்கள் சந்தை மதிப்பை அதிகரிக்க ஐபிஓக்களையும் வெளியிட்டு வருகின்றது. அப்படி சமீபத்தில் ஐபிஓ அறிவித்த ஸ்டார்ட் அப் நிறுவனம் தான் ஃபர்ஸ்ட் க்ரை..
ஃபர்ஸ்ட் க்ரை: குழந்தை பிறந்து சில ஆண்டுகளுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் விற்கும் நிறுவனம் தான் ஃபர்ஸ்ட் க்ரை.. முதலில் ஈ காமர்ஸ் நிறுவனமாகத் தொடங்கப்பட்டு இப்போது பல்வேறு ஊர்களில் தங்கள் கடைகளை வைத்திருக்கிறது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த சச்சினுக்குத் தான் கொஞ்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், கடந்த ஆண்டு தான் இந்த இ-காமர்ஸ் நிறுவனமான ஃபர்ஸ்ட் க்ரையில் முதலீடு செய்திருந்தார். இப்போது இந்த நிறுவனம் ஐபிஓ மூலம் பங்குகளைப் பொதுமக்களுக்கு விற்கும் நிலையில், இதனால் தான் சச்சினுக்கு 10% நஷ்டம் ஏற்படுகிறது.
சச்சின்: அதாவது சச்சின் இந்த நிறுவனத்தின் ஒரு பங்கை ரூ.487.44 கொடுத்து வாங்கி இருந்தார். ஆனால், இப்போது ஐபிஓவில் இந்த நிறுவனத்தின் பங்கின் விலை ரூ.440-ரூ. 465 ஆக மட்டுமே என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஐபிஓவில் தங்களைப் பங்குகளை விற்க போவதில்லை என சச்சின் தரப்பு கூறியிருக்கிறது. அதை விற்காத வரை அவர்களுக்கு உண்மையில் நஷ்டம் இல்லை. இருப்பினும், அதன் சந்தை மதிப்பு இப்போது குறைந்துள்ளதால் இதை unrealised loss என்பார்கள்.
டாடாவுக்கு 5 மடங்கு லாபம்: அதேநேரம் இந்த ஃபர்ஸ்ட் க்ரை ஐபிஓவில் மிகப் பெரிய சக்சஸ் யாருக்கு என்றால் அது டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவுக்கு தான். டாடாவுக்கு ஃபர்ஸ்ட் க்ரை நிறுவனத்தில் 77,900 பங்குகள் இருக்கிறது. இதைச் சராசரியாக ரூ. 84.72க்கு டாடா வாங்கி இருந்தார்.. இப்போது ஐபிஓவில் டாடா தனது பங்குகளை விற்க உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அவருக்கு 5 மடங்கு லாபம் கிடைக்கிறது.
அதேபோல இதில் மற்றொரு நிறுவனமும் பெரிய லாபம் அடையப் போகிறது.. அது மகேந்திரா & மகேந்திரா நிறுவனம்.. ஃபர்ஸ்ட் க்ரை நிறுவனத்தில் மகேந்திரா & மகேந்திராவுக்கு சுமார் 11 சதவிகித பங்குகள் இருக்கிறது. இதை அவர்கள் டாடாவை விடக் குறைந்த விலைக்கு, அதாவது ஒரு பங்கை சாரசரியாக ரூ.77.96 கொடுத்து மட்டுமே வாங்கினார்கள். இப்போது அவர்கள் 6 மடங்கு லாபத்தில் ஐபிஓவில் விற்க உள்ளனர்.இவர்களைத் தவிர விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜியும் சுமார் 57% லாபத்தில் தனது பங்குகளில் ஒரு பகுதியை விற்கப் போகிறார்.
என்ன காரணம்: இதுபோல இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த பெரும்பாலானோருக்கு இது லாபகரமாகவே இருக்கிறது. இவர்கள் எல்லாம் ஃபர்ஸ்ட் க்ரை நிறுவனத்தில் முன்பே முதலீடு செய்தவர்கள். அதேநேரம் கடந்தாண்டு இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த சச்சின் உள்ளிட்ட சிலருக்கு மட்டுமே இதில் நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications