இமாச்சல் சென்ற சைதை துரைசாமியின் ரத்த மாதிரி.. நாளை வெளியாகிறதா டிஎன்ஏ முடிவுகள்? வெற்றி எங்கே?
டெல்லி: சட்லஜ் ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்ட மனித மூளையின் டிஎன்ஏவை சைதை துரைசாமியின் டிஎன்ஏவுடன் ஒப்பிட்டு பார்க்க அவருடைய ரத்த மாதிரிகள் இமாச்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
சென்னையின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி. இவர் என்றாவது ஒரு நாள் என்ற படத்தை இயக்கியுள்ளார். மேலும் தனது தந்தையின் ஐஏஎஸ் அகாதெமியையும் கவனித்துக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் அவர் த்ரில்லர் படத்தை இயக்கவிருந்தார். இதற்காக சிம்லாவில் ஷூட்டிங் எடுப்பதற்கான லொகேஷனை பார்க்க இமாச்சல் சென்றிருந்தார். உடன் அவருடைய உதவியாளர் திருப்பூரை சேர்ந்த கோபிநாத் என்பவருடன் சென்றிருந்தார்.
அங்கு ஹோட்டலில் சாப்பிட்டு முடித்த வெற்றியும் கோபிநாத்தும் உள்ளூரில் பெரிய காரை எடுத்துக் கொண்டு ஓட்டுநர் டென்சினுடன் சிம்லா சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது கசாங் நலா எனும் பகுதியில் கார் சென்ற போது ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில் விழுந்தது. இதையடுத்து தகவலறிந்த போலீஸார் ஆற்றுக்குள் விழுந்த காரை கயிறு கட்டி மீட்டனர். அதில் டென்சின் உடல் மீட்கப்பட்டது. கோபிநாத்தும் ஆற்றங்கரையில் காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டார்.
ஆனால் வெற்றியின் நிலைதான் தெரியவில்லை. அவரை 7 நாட்களாக தேடி வருகிறார்கள். ஆனாலும் கிடைக்கவில்லை, ஆழ்கடல் நீச்சல் வீரர்களை வைத்து 3 கி.மீ. தூரத்திற்கு தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. பாறை இடுக்குகளில் மூளை திசு கிடைத்துள்ளது. இது வெற்றியோடதா என அறிய டிஎன்ஏ சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த டிஎன்ஏவை வெற்றியின் தந்தையின் டிஎன்ஏவுடன் ஒப்பிட்டு பார்ப்பதற்காக அவருடைய ரத்த மாதிரிகள் சென்னையில் சேகரிக்கப்பட்டு இமாச்சலுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த ரத்த மாதிரியில் டிஎன்ஏ சோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகளை வைத்துதான் வெற்றியின் நிலை தெரியவரும். இந்த டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் நாளை வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications