சர்ச்சையால் போன பதவி மீண்டும் கிடைத்தது.. காங்கிரஸ் கட்சியின் ஓவர்சீஸ் தலைவராக சாம் பிட்ரோடா நியமனம்
டெல்லி:காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவராக சாம் பிட்ரோடா மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சாம் பிட்ரோடாவை மீண்டும் நியமித்து காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார்.
வெளிநாடுகளுக்கான காங்கிரஸ் கட்சித் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் சாம் பிட்ரோடா. இவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அதிகாரப்பூர்வ ஆலோசகராக இருந்தவர். ராகுல் காந்திக்கு நெருக்கமான நபராக அறியப்படுகிறார். அமெரிக்காவில் வசித்து வரும் சாம் பிட்ரோடா லோக்சபா தேர்தல் சமயத்தில் அண்மையில் கூறிய கருத்து பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.

அமெரிக்காவை சேர்ந்த முன்னணி ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த சாம் பிட்ரோடா, "பல்வகைத்தன்மை கொண்ட ஜனநாயக நாட்டுக்கு இந்தியா ஒரு சிறந்த உதாரணம். இந்தியாவின் கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்கள் போலவும், தெற்கு பகுதியில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் இருக்கிறார்கள். ஆனால் இதெல்லாம் ஒரு பொருட்டல்ல, நாங்கள் அனைவரும் சகோதர சகோதரிகள்" என்று பேசினார்.
சாம் பிட்ரோடாவின் இந்தப் பேச்சை குறிப்பிட்டு பாஜகவினர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தனர். தேர்தல் பிரச்சார பேரணியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி சாம் பிட்ரோடா கருத்தைச் சுட்டிக்காட்டி காட்டமாக விமர்சித்தார். பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பலரும் சாம் பிட்ரோடா பேச்சை கடுமையாக விமர்சித்தனர்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவர் பதவியை ராஜினாமா செய்திருந்தார் சாம் பிட்ரோடா. இந்நிலையில் லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகி, எம்.பிக்கள் பதவியேற்றுள்ள நிலையில் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவராக சாம் பிட்ரோடா நியமிக்கப்பட்டு உள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடாவை ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவராக மீண்டும் நியமித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, சுமார் ஒன்றரை மாதத்தில் மீண்டும் இந்த பதவிக்கு வந்துள்ளார் சாம் பிட்ரோடா.












Click it and Unblock the Notifications