ராமரின் இந்தியாவைவிட சீதாவின் நேபாளத்திலும், ராவணனின் இலங்கையிலும் பெட்ரோல் விலை குறைவு ஏன்.. எம்பி
டெல்லி: சீதையின் நேபாளத்திலும் ராவணனின் இலங்கையிலும் மட்டும் பெட்ரோல் விலை குறைவாக உள்ளதே ஏன் என நாடாளுமன்றத்தில் சமாஜ்வாதி எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நாளுக்கு நாள் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இது குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. நேற்றைய தினம் மக்களவையில் பெட்ரோல் டீசல் விலை குறித்து எதிர்க்கட்சிகள் கண்டனங்களை எழுப்பின.
சீதாதேவி
4 மெட்ரோ நகரங்களில் பெட்ரோல் விலை ரூ 100 ஐ தொடும் அளவுக்கு வந்துவிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் சமாஜ்வாதி கட்சியின் எம்பி விஷாம்பர் பிரசாத் நிஷாத் பேசுகையில், சீதா தேவி பிறந்த நேபாளத்தில் பெட்ரோல் விலை குறைவாக உள்ளது. அது போல் ராவணன் பிறந்த இலங்கையில் பெட்ரோல் விலை குறைந்துள்ளது.
டீசல் விலை
ஆனால் ராமர் பிறந்த இந்தியாவில் மட்டும் பெட்ரோல் விலை அதிகரித்து கொண்டே இருக்கிறதே ஏன் என்று கேள்வி எழுப்பினார். பாஜக எதற்கெடுத்தாலும் ராமாயணத்தை மேற்கோள் காட்டி பேசுவதையும் சுட்டிக் காட்டும் வகையில் அவர் கேள்வி எழுப்பியது அவையில் சிரிப்பலைகள் ஏற்படுத்தின. இதற்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில் இவ்வாறு அண்டை நாடுகளுடன் பெட்ரோல், டீசல் விலையை ஒப்பிடுவது சரியாக இல்லை.
நுகர்வோரும் குறைவு
அந்நாடுகளில் மக்கள் தொகை குறைவு, நுகர்வோரும் குறைவு. பெரிய பொருளாதாரம் கொண்ட நாடுகளுடன் தம்மை ஒப்பிட்டுக் கொள்வது சரியா இல்லை குறைந்த பொருளாதாரம் கொண்ட நாடுகளுடன் ஒப்பிடுவது சரியா? நீங்கள் கூறிய நாடுகளில் மண்ணெண்ணெய் விலையை நம் நாட்டு விலையுடன் ஒப்பிட்டு பாருங்கள்.
நேபாளம்
வங்கதேசம், நேபாளத்தில் மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ 57 முதல் ரூ 59 விற்பனையாகிறது. ஆனால் இந்தியாவில் ரூ 32 ஆக உள்ளது. கடந்த 300 நாட்களில் 60 நாட்கள் பெட்ரோல் விலை ஏற்றப்பட்டுள்ளது. 250 நாட்கள் பெட்ரோல் டீசல் விலைகளில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்திருக்கிறது. எனவே எப்போதுமே விலை அதிகம் என சொல்லக் கூடாது என்றார் பிரதான்.