'ஆல்மா மேட்டர்'.. லஷ்கர்-இ-தொய்பா பயிற்சி மையம் தாக்குதலுக்கு பிறகு எப்படி இருக்குனு பாருங்க!
டெல்லி: ஆபரேஷன் சிந்தூரில் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்பின் பயிற்சி மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றன. தாக்குதலுக்கு பிறகு இந்த பயிற்சி மையங்கள் எப்படி இருக்கிறது என்பது செயற்கைக்கோள் படங்கள் மூலம் விளக்கப்பட்டிருக்கிறது.
மொத்தம் 9 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5 இடங்களிலும், பாகிஸ்தானுக்குள் 4 இடங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

தாக்குதல் நடத்தப்பட்ட இடங்கள் அனைத்தும் பயங்கரவாதிகளின் பயிற்சி மையங்கள், தங்குமிடங்கள்தான். பஹாவல்பூரில் உள்ள ஜாமியா பள்ளிவாசல், முரிட்கே நகரில் நடந்த தாக்குதல்கள் பயங்கர சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக முரிட்கே, பஞ்சாபில் உள்ள நங்கல் சாஹ்தான் பகுதியில் 82 ஏக்கர் பகுதியில் லஷ்கர்-இ-தொய்பாவின் பயிற்சி மையம் அமைந்திருந்தது. இதற்கு 'ஆல்மா மேட்டர்' என்று பெயர்.
அதேபோல பஹாவல்பூர் நகரில், கராச்சி-டோர்கம் தேசிய நெடுஞ்சாலையான என்எச் -5க்கு பக்கத்தில் கராச்சி மோர் எனும் பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் இளைஞர்கள் பயிற்றுவிப்பு முகாம் 'மர்க்ஸ்சுப்ஹான் அல்லாஹ்' என்கிற பெயரில் 15 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வந்திருக்கிறது. இந்த இரண்டு பயிற்சி முகாம்களையும் குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
மொத்தம் 9 பயங்கரவாத தளங்கள் குறிவைத்து அழிக்கப்பட்டிருக்கின்றன. இதில் இந்திய விமானப்படையின் ரோல் மிக முக்கியமானது. எல்லை தாண்டாமல், சில நூறு கி.மீக்கு அந்த பக்கம் இருக்கும் இலக்கை சரியாக தாக்கி அழிக்க துல்லியமான திட்டம் தேவை. நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த திட்டத்தை இந்திய விமானப்படை சாதித்து காட்டியிருக்கிறது. பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்தி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவே இந்த ஆபரேஷன் சிந்தூர் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
தாக்குதலுக்கு முன்னர் பயங்கரவாதிகள் தளம் எப்படி இருந்தது? அதற்கு பின்னர் எப்படி மாறியிருக்கிறது என்பதை மேக்சர் டெக்னாலஜிஸ் எனும் செயற்கைக்கோள் படம் பிடித்து வெளியிட்டிருக்கிறது. அதில் தாக்குதலுக்கு உள்ளான இடங்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை தெளிவாக காட்டுகிறது.
கடந்த ஏப்.22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 26 பேர் கொல்லப்பட்டனர். இங்குள்ள பைசாரன் பள்ளத்தாக்கு மிகவும் பிரபலமானதாகும். இங்கிருந்து துலியான் ஏரிக்கு போக வழியிருக்கிறது. இங்கிருந்துதான் போகவும் முடியும். எனவே பைசாரன் பள்ளத்தாக்கு மிக முக்கிய இடமாகும். இந்த இடத்தில்தான் தாக்குதல் நடந்தது. தாக்குதலை நடத்தியவர்கள் இந்துக்களை மட்டும் அடையாளம் கண்டு கொலை செய்திருப்பதாக சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications