இத பண்ணுங்க.. பெட்ரோல் விலை கண்டிப்பா குறையும்.. நாங்க கேரண்டி.. இந்தியாவுக்கு சவுதியின் அட்வைஸ்
டெல்லி: ஒபெக் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என இந்தியா விடுத்திருந்த கோரிக்கையை நிராகரித்துள்ள சவுதி அரேபியா, கடந்தாண்டு மிகக் குறைந்த விலைக்கு வாங்கி சேமித்து வைத்துள்ள கச்சா எண்ணெய்யைப் பயன்படுத்தி விலையைக் கட்டுப்படுத்தலாம் என பதிலளித்துள்ளது.
கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாகச் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பெரியளவு சரிந்தது. ஒரு கட்டத்தில் கச்சா எண்ணெய் விலை பூஜ்ஜியத்திற்கும் கீழாகச் சென்றது. அந்த சமயத்தில் பல்வேறு நாடுகளும் கச்சா எண்ணெய்யை வாங்கி சேமித்து வைத்துக்கொண்டன.
ஆனால், இந்தாண்டு நிலைமை முற்றிலுமாக தலைகீழாக உள்ளது. பெரும்பாலான நாடுகள் தங்கள் உற்பத்தியைத் தொடங்கிவிட்டதால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
இந்தியா கோரிக்கை
உலகெங்கும் அதிகளவில் எரிபொருள்களை உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு என ஒபெக் என்ற கூட்டமைப்பு உள்ளது. கடந்தாண்டு ஏற்பட்ட வருமான இழப்பைச் சரி செய்யும் நோக்கில், இந்தாண்டு கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துக்கொள்ள அந்த நாடுகள் முடிவெடுத்துள்ளன. இதனாலேயே கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பொதுமக்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாகக் கச்சா எண்ணெய் உற்பத்தியை ஒபெக் நாடுகள் அதிகரிக்க வேண்டும் என்றும் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதை பண்ணுங்க
இந்தியாவின் கோரிக்கை குறித்துப் பதிலளித்துள்ள சவுதி எரிசக்தி மந்திரி இளவரசர் அப்துல்அஜிஸ் பின் சல்மான், "இந்தியாவைப் பொறுத்தவரை, பிரச்சனைக்குத் தீர்வு மிக மிக எளிமையானது. கடந்தாண்டு ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் மிகக் குறைந்த விலையில் அவர்கள் கச்சா எண்ணெய் வாங்கி சேமித்து வைத்தனர். அதை இப்போது பயன்படுத்தி நிலைமையைச் சமாளிக்க வேண்டும். அது விவேகமான முடிவாக இருக்கும்" என்றார்.
வாங்கிக் குவித்த இந்தியா
கடந்தாண்டு ஏப்ரல் - மே மாதங்களில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் குறைந்தபோது இந்தியா 16.71 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய்யை வாங்கியது. அவை விசாகப்பட்டினம், மங்களூர் மற்றும் பதூர் ஆகிய இடங்களில் சேமிக்கப்பட்டுள்ளது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யை 19 அமெரிக்க டாலருக்கு வாங்கியதாக பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார்.
ஒரு வாரம் ஏறாத விலை
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தொடர்ந்து உயர்வதால், இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்தது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்து விற்பனையானது. இந்நிலையில், கடந்த வாரம் ஐந்து மாநிலங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. இருந்தாலும்கூட கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரிப்பதால் விரைவில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை ஏறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.