காஷ்மீரில் நடக்கும் ஜி20 கூட்டத்தை ‘ஸ்கிப்’ செய்யும் சவுதி! இந்திய அரசுக்கு எதிர்ப்பாக புறக்கணிப்பு?
டெல்லி : ஜி-20 செயற்குழு உச்சி மாநாட்டுக் கூட்டம் ஸ்ரீநகரில் தொடங்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், துருக்கி, சவுதி அரேபியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் இன்னும் தங்கள் வருகையை உறுதிப்படுத்தவில்லை. இதனால், சவுதி உள்ளிட்ட நாடுகள் இந்தக் கூட்டத்தை தவிர்க்கக்கூடும் எனத் தெரிகிறது.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஓர் எதிர்காலம் எனும் முழக்கத்துடன் நடைபெறும் இந்த மாநாட்டின் பெருமையை உணர்த்தும் வகையில் பல்வேறு மாநிலங்களிலும் ஜி20 உச்சி மாநாட்டு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு நாடுகளை சார்ந்த தலைவர்கள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

ஜி-20 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள், பாதுகாப்புத்துறை, அமைச்சர்கள் பங்கேற்ற ஜி20 கூட்டங்கள் ஏற்கனவே டெல்லி, கோவா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றன. அந்த வகையில் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரிலும் இந்த மாநாட்டு கூட்டத்தை நடத்த மத்திய அரசு முடிவெடுத்தது.
வரும் 22 முதல் 24ம் தேதி வரை தால் ஏரியின் கரையில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில், ஜி20 நாடுகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்திற்கு மொத்தம் 60 சர்வதேச பிரதிநிதிகள் இதுவரை பதிவு செய்துள்ளனர் என்று மத்திய சுற்றுலாத்துறை செயலாளர் அரவிந்த் சிங் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். "இதுவரை மொத்தம் 17 ஜி-20 உறுப்பு நாடுகள் தங்கள் பங்கேற்பை உறுதிப்படுத்தியுள்ளன. சீனா, துருக்கி மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் தங்கள் வருகையை பதிவு செய்யவில்லை" என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், சீனா காஷ்மீரில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று தெரிவித்தது. சர்ச்சைக்குரிய பகுதியில் மாநாடு நடத்துவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவிக்கிறது. காஷ்மீரில் நடைபெறும் மாநாட்டில் சீனா கலந்துகொள்ளாது என்று சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சீனாவை தொடர்ந்து துருக்கியும் இதில் பங்கேற்காது எனக் கூறப்படுகிறது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கியதில் துருக்கிக்கு மாற்றுக்கருத்து இருப்பதால் இந்தக் கூட்டத்தில் பங்கேற்காது என்று சொல்லப்படுகிறது. மேலும், சவுதியும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்காது எனத் தெரிகிறது.
துருக்கி, சவூதி அரேபியா ஆகிய நாடுகள் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் (OIC) உறுப்பினர்களாக உள்ளன. அவை ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் இந்திய அரசின் முடிவை விமர்சித்தன. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டு கூட்டத்தை சவுதி அரேபியாவும் புறக்கணிக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications