2019 முதல் வாங்கிய தேர்தல் பத்திரம் எவ்வளவு? பணமாக்கப்பட்டது எத்தனை? உச்சநீதிமன்றத்தில் எஸ்பிஐ தகவல்
டெல்லி: உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மற்றும் உத்தரவை தொடர்ந்து தேர்தல் பத்திரம் தொடர்பான விபரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் நேற்று எஸ்பிஐ சமர்ப்பித்தது. இந்நிலையில் தான் அது தொடர்பாக எஸ்பிஐ சார்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் 2019 முதல் எவ்வளவு தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது. அதில் எத்தனை தேர்தல் பத்திரங்கள் பணமாக்கப்பட்டுள்ளன என்பது பற்றிய முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசில் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் முறை நடைமுறையில் இருந்தது. குறிப்பிட்ட கட்சிகளுக்கு நன்கொடை வழங்க நினைப்போர் எஸ்பிஐ வங்கியில் தேர்தல் பத்திரங்கள் வாங்கி, அதன்மூலம் நன்கொடையை வழங்கலாம்.

இதில் நன்கொடை வழங்கியவர்களின் பெயர் விபரம் வெளியே தெரியாது. இந்நிலையில் தான் தேர்தல் பத்திரம் முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த அரசியல் சாசன அமர்வு தேர்தல் பத்திரம் செல்லாது.
எஸ்பிஐ இனி தேர்தல் பத்திரம் முறையை கைவிட வேண்டும். 2019 ஏப்ரல் 12ம் தேதி முதல் 2024 பிப்ரவரி மாதம் 15ம் தேதி வரை விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விபரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஏப்ரல் 6ம் தேதிக்குள் வழங்க வேண்டும். தேர்தல் ஆணையம் அதனை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என தெரிவித்தது. ஆனால் எஸ்பிஐ விபரங்களை வழங்க கால அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தை நாடியது.
அதாவது 2024 ஜுன் மாதம் 30ம் தேதி வரை தேர்தல் பத்திரம் விபரங்களை வழங்க கால அவகாசம் வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கூறியது. ஆனால் உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. ஏப்ரல் 12ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்தில் விபரங்களை வழங்க உத்தரவிட்டது.
இதையடுத்து தேர்தல் பத்திர விபரங்களை எஸ்பிஐ வங்கி நேற்று மாலையில் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தது. இந்த விபரங்களை வரும் 15ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட உள்ளது.
இத்தகைய சூழலில் தான் இன்று தேர்தல் பத்திரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் எஸ்பிஐ சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தேர்தல் ஆணையத்தில் தேர்தல் பத்திரம் தொடர்பான விபரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 ஏப்ரல் 1ம் தேதி முதல் ஏப்ரல் 11 வரை மொத்தம் 3,346 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. அதில் 1,609 பத்திரங்கள் பணமாக்கப்பட்டுள்ளன. 2019 ஏப்ரல் 12ம் தேதி முதல் நடப்பு ஆண்டு பிப்ரவரி 15 வரை மொத்தம் 18,871 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டன. இதில் 20,421 தேர்தல் பத்திரங்கள் பணமாக்க்பபட்டுள்ளன. மொத்தமாக பார்த்தால் 2019 ஏப்ரல் 1ம் தேதி முதல் நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதம் 15ம் தேதி வரை மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதில் 22,030 தேர்தல் பத்திரங்கள் பணமாக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications