எம்பிபிஎஸ் சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகளை வெளியிடலாம்.. உச்சநீதிமன்றம் உத்தரவு!
டெல்லி: எம்.பி.பி.எஸ் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை என்றும் முடிவுகளை வெளியிடக்கூடது என்ற மும்பை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
மும்பையை சேர்ந்த இரு மாணவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட "கோடிங் தாள் மற்றும் புக்லெட்" இரண்டுக்கும் பல்வேறு வேறுபாடுகளும், குளறுபடிகளும் இருந்ததால், நீட் தேர்வை முறையாக எழுத முடியவில்லை.

எனவே தங்களுக்கு மறு-தேர்வு நடத்த வேண்டும், அதுவரை இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இரண்டு மாணவர்களுக்கு இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் மறுதேர்வு நடத்திய பின்னரே முடிவுகளை வெளியிட வேண்டும் என்றும், இரு மாணவர்களுக்கும் விரைந்து நீட் மறுதேர்வை தடத்த வேண்டும் எனவும் தேசிய தேர்வுகள் முகமைக்கு உத்தரவிட்டது.
மும்பை உயர்நீதிமன்றத்தின் இந்த தடை உத்தரவை எதிர்த்து தேசிய தேர்வுகள் முகமை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதில் பல லட்சம் மாணவர்கள் முடிவுக்காக காத்திருக்கின்றனர். மாணவர் சேர்க்கையும் தாமதமாகிறது. எனவே தடை உத்தரவை நீக்க வேண்டும் என கோரியது.
இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவை பரிசீலித்த நீதிபதிகள், 16 லட்சம் மாணவர்கள் ஒரு தேர்வை எழுதி முடிவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது, இரண்டு பேருக்காக தேர்வு முடிவுகளை நிறுத்தி வைப்பது ஏற்புடையதல்ல.
எனவே, எம்.பி.பி.எஸ் நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என்ற மும்பை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவிட்டனர். அதேவேளையில், பாதிக்கப்பட்டதாக கூறி வழக்கு தொடர்ந்த இரு மாணவர்களின் புகார்கள் குறித்து பின்னர் விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் எம்.பி.பி.எஸ் நீட் தேர்வு வெளியாவதில் இருந்த சிக்கல் முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வில் வடமாநிலங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் நிலையில் தேர்வு முடிவுகளை ஒத்தி வைக்க வேண்டும், மேலும் செப்டம்பர் மாதம் எழுதிய தேர்வை ரத்து செய்து விட்டு மறுதேர்வு நடத்த வேண்டும் என சில மாணவர்கள் வழக்கு தொடர்ந்ததால் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என கூறப்பட்ட நிலையில் தற்போது புதிய வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. இனியாவது தேர்வு முடிவுகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடமும் பெற்றோரிடமும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications