ஜம்மு காஷ்மீர் தொடர்பான அனைத்து உத்தரவுகளையும் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கைகள்,, கடையடைப்பு, கட்டுப்பாடுகள் தொடர்பான அனைத்து உத்தரவுகளையும் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் ஆகஸ்ட் 5-ந் தேதி முதல் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370-வது பிரிவு நீக்கம், ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பு என அதிரடி காட்டியது மத்திய அரசு.

கடந்த 2 மாத காலமாக வெளி உலகத்தில் இருந்து ஜம்மு காஷ்மீர் முழுமையாக துண்டிக்கப்பட்டிருந்தது. ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
தற்போதுதான் மெல்ல மெல்ல அங்கு இயல்பு வாழ்க்கை திரும்ப தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370-வது பிரிவு நீக்கத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.
நீதிபதி என்வி ரமணா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இந்த விசாரணையை நடத்தியது. இன்றைய விசாரணையின் போது, ஜம்மு காஷ்மீர் தொடர்பான உத்தரவுகளை மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை.
மேலும் கைதுகள், கட்டுப்பாடுகள், கடையடைப்பு உள்ளிட்டவை தொடர்பான அந்த உத்தரவுகளை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். அந்த உத்தரவுகளை பகிரங்கப்படுத்த வேண்டாம் என மத்திய அரசு நினைத்தால் அதற்கான காரணங்களுடன் பிரமாண பத்திரத்தை வரும் 25-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications