சுதந்திரமடைந்து 78 ஆண்டுகளுக்கு பின்னரும்.. கைகளால் ரிக்ஷா இழுப்பது மனிதாபிமானமற்றது!-உச்சநீதிமன்றம்
டெல்லி: மகாராஷ்டிராவில் உள்ள மாதேரான் என்ற மலைவாழிடத்தில், கைகளால் இழுக்கப்படும் ரிக்ஷாக்கள் இன்றும் நடைமுறையில் இருந்து வருகின்றன. இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் நீண்ட காலத்திற்கு முன்னரே, கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கை ரிக்ஷாக்கள் ஒழிக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிராவின் ராய்கட் மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையில் 'மாதேரான்' எனும் பகுதி அமைந்திருக்கிறது. மும்பைியலிருந்து வெறும் 90 கி.மீ தொலைவில் இந்த பகுதி அமைந்திருப்பதால் மக்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்ற மலைப்பகுதியாக இருக்கிறது.

உச்சநீதிமன்றம் உத்தரவு
இங்கு வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதே இதன் சிறப்பு. காட்டு சூழலை கெடுக்க விரும்பாத மக்கள், பைக்குகளை கூட இந்த பகுதிக்குள் அனுமதிப்பதில்லை. எனவே கை ரிக்ஷாக்களும், குதிரைகளும் மட்டுமே சுற்றுலா பயணிகளை மேலே அழைத்துச்செல்ல பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில், இந்த பகுதியில் உள்ள கை ரிக்ஷாக்களை தடை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்திருக்கிறது.
தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதிகள் கே. வினோத் சந்திரன் மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை விசாரித்தது.
"இந்தியா போன்ற ஒரு வளரும் நாட்டில், மனித கௌரவத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரான இத்தகைய நடைமுறை, சமூக மற்றும் பொருளாதார நீதிக்கான அரசியலமைப்பு வாக்குறுதிகளை சிறுமைப்படுத்துகிறது.
சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள்
சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் மற்றும் அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு 75 ஆண்டுகள் ஆன பின்னரும், குடிமக்களுக்கு சமூக மற்றும் பொருளாதார நீதியை உறுதி செய்யும் அரசியலமைப்புச் சட்டத்தின் வாக்குறுதியை, இத்தகைய மனிதநேயமற்ற நடைமுறையைத் தொடர்வது, இந்திய மக்கள் தங்களுக்கே கொடுத்த வாக்குறுதியை மீறுவதாகும்.
ஆசாத் ரிக்ஷா புல்லர்ஸ் யூனியன் வழக்கில் இந்த நீதிமன்றம் தெரிவித்த கருத்திற்கு 45 ஆண்டுகளுக்குப் பிறகும், ஒரு மனிதன் மற்றொரு மனிதனை இழுக்கும் பழக்கம் மத்தெரன் நகரில் இன்னும் நிலவுவது வருத்தமளிக்கிறது. சமூக மற்றும் பொருளாதார சமத்துவம் மற்றும் சமூக மற்றும் பொருளாதார நீதிக்கான அரசியலமைப்பு வாக்குறுதிக்கு இந்த நடைமுறை பொருந்துகிறதா என்று நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி. துரதிர்ஷ்டவசமாக, பதில் எதிர்மறையாகவே இருக்கும்.
கை ரிக்ஷா
ஏழ்மையே பெரும்பாலும் மக்களை இத்தகைய வேலைகளில் தள்ளுகிறது. ஆனால், பொருளாதார நிர்பந்தம் மனித உழைப்பை இழிவுபடுத்துவதை நியாயப்படுத்த முடியாது.
மத்தேரான் ஒரு சூழல் உணர்திறன் கொண்ட மலைப்பகுதி. அங்கு அவசரகால வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இது சுற்றுலாப் பயணிகளையும், பொருட்களையும் கொண்டு செல்ல கைகளால் இழுக்கப்படும் ரிக்ஷாக்களை நீண்ட காலமாக நம்பியுள்ளது. எனவே கைகளால் இழுக்கப்படும் ரிக்ஷாக்களை ஆறு மாதங்களுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக நீக்க வேண்டும். தஸ்தூரி நாகாவில் இருந்து சிவாஜி சிலை வரை பாவர் பிளாக் கற்களைப் பதிக்க வேண்டும். இறுதியில் இந்த பகுதியில் மின்சார ரிக்ஷாக்கள் பயன்படுத்தப்பட வேண்டும்" என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கின்றனர்.
கடந்த 1973ம் ஆண்டு தமிழ்நாட்டின் அப்போதைய முதல்வராக இருந்த மு.கருணாநிதி, மனிதனை மனிதன் சுமந்து செல்லும் நடைமுறை ஒழிக்கப்பட வேண்டும் என்று சொல்லி கை ரிக்ஷாவை ஒழிக்க உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications