மனிதர்கள் காயமடைகிறார்களே குத்து சண்டையை தடை செய்யலாமா? ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி
டெல்லி: மனிதர்கள் காயமடைகிறார்கள் என்பதற்காக குத்துச் சண்டைக்கு ஜல்லிக்கட்டுக்கு கேட்பது போல தடை கேட்பீர்களா? என்று பீட்டா உள்ளிட்ட அமைப்புகளுக்கு உச்சநீதிமன்றம் சுளீர் கேள்வியை எழுப்பியுள்ளது.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் காட்சிபடுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் காளை சேர்க்கப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. 2016-ம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவால் 2017-ல் ஜல்லிக்கட்டு நடைபெறாது என அறிவிக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி மீதான தடையை நீக்க கோரி தமிழர்கள் பெரும் போராட்டம் வெடித்தது. இது மக்கள் புரட்சியாக உருமாறியது. இதனையடுத்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு ஆளுநரும் ஒப்புதல் தந்தார். இதனால் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் மீண்டும் நடத்தப்பட்டன.
ஆனால் தற்போது ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்க கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடர்ந்துள்ளன. இவ்வழக்கு விசாரணை கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி பீட்டா உள்ளிட்டவை முன்வைத்த அத்தனை வாதங்களையும் உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி உள்ளிட்டோர் அடங்கிய 5 பேர் கொண்ட பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. அந்த விசாரணையின் போது காளைகள், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் துன்புறுத்தப்படுவதாக சில போட்டோக்களை பீட்டா காண்பித்தது. ஆனால் உச்சநீதிமன்றம் இதனை நிராகரித்தது. மேலும் ஜல்லிக்கட்டு நிகழ்வை தடை விதிக்க வேண்டும் என முன்வைத்த பீட்டாவிடம் பல கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்தனர். தமிழக அரசும் பீட்டாவுக்கு எதிராக ஆணித்தரமான வாதங்களை முன்வைத்திருந்தது. இந்த வழக்கில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது.
இன்றைய விசாரணையின் போது, சதி,வரதட்சணை,குழந்தை திருமணம் உள்ளிட்டவை கலாசாரம், பண்பாடு சார்ந்த ஒரு அங்கமாக இருந்து. இப்போது அவை இல்லை. ஒழிக்கப்பட்டது. அதேபோல்தான் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் எனவும் பீட்டா உள்ளிட்ட தரப்பு வாதிட்டது.
அப்போது, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மனிதர்கள் காயமடைகின்றனர்; உயிரிழக்கின்றனர்; ஆகையால் தடை கேட்கிறீர்கள்.. அதேபோல் குத்து சண்டையிலும் நிகழ்கிறது.. அதற்காக குத்துச் சண்டைக்கும் தடை கேட்பீர்களா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பீட்டா தரப்பு வழக்கறிஞர் ஷியாம்திவான் பதிலளிக்கையில், குத்துச் சண்டைக்கு தடை விதித்தால் இந்த வழக்கையே வாபஸ் பெறுகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications