சிவசேனா யாருக்கு சொந்தம்? உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் இன்று விசாரணை
டெல்லி: சிவசேனாவுக்கு உரிமை கோரி உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தாக்கல் செய்த வழக்கை உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் இன்று விசாரிக்க உள்ளது.
மகாராஷ்டிராவில் முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக சிவசேனாவின் 40 எம்.எல்.ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் போர்க்கொடி தூக்கினர். இதனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங். கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.

இதனைத் தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா பிரிவுடன் இணைந்து பாஜக ஆட்சி அமைத்தது. முதல்வராக ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றனர்.
பின்னர் சிவசேனாவின் நிர்வாகிகள், எம்.பி.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகள் பெரும்பான்மையானோர் ஏக்நாத் ஷிண்டேவை ஆதரித்தனர். இதனால் யார் உண்மையான சிவசேனா என்ற குழப்பம் ஏற்பட்டது. தாங்களே உண்மையான சிவசேனா, தங்களுக்கே சிவசேனாவின் வில் அம்பு சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் ஏக்நாத் ஷிண்டே தரப்பு மனு அளித்தது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே தரப்பு மனுத் தாக்கல் செய்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், சிவசேனா விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்க கூடாது என தடை விதித்தது. மேலும் இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றியும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் இன்று சிவசேனா வழக்கை விசாரிக்க உள்ளது. நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து உத்தரவிட உள்ளது.












Click it and Unblock the Notifications