அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு அடுத்தடுத்து சிக்கல்.. உச்சநீதிமன்றம் உத்தரவால் தூசு தட்டும் அமலாக்கத் துறை
டெல்லி: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. தேர்தல் என்றால் அரசியல் புள்ளிகளின் வழக்குகள் தூசி தட்டப்படுவது சகஜமாகிவிட்டது. அமைச்சர் ஐ. பெரியசாமி சொத்து குவிப்பு வழக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அமலாக்கத்துறை தனக்கு அனுப்பிய நோட்டீசுக்கு எதிராக அமைச்சர் ஐ.பெரியசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. திமுகவிடம் இருந்து ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணி முயற்சி செய்து வருகிறது. அகில இந்தியளவில் பாஜகவை தீவிரமாக திமுகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று பாஜக மேலிடம் நினைக்கிறது. மத்திய அமைச்சர் அமித்ஷா நேரடியாக தமிழ்நாடு அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஐ. பெரியசாமி சொத்துக் குவிப்பு வழக்கு
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தமிழ்நாடு பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக அமைச்சர்கள் மற்றும் சீனியர் நிர்வாகிகளின் ஊழல், முறைகேடு வழக்குகளை தூசி தட்டி நெருக்கடி கொடுக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வருமானவரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் தற்போதைய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவர் வருமானத்துக்கு அதிகமாக சுமார் 2.35 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் விசாரணை நடத்தி வந்தனர்.
அமலாக்கத்துறை விசாரணை
காவல்துறை தாக்கல் செய்த வழக்கில் போதி ஆவணங்கள் இல்லாததால் திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றம் பெரியசாமி மற்றும் அவர் குடும்பத்தினரை வழக்கில் இருந்து விடுவித்தது. இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அதில் சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
பெரியசாமி சொத்துக் குவிப்பு வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க தொடங்கியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். மேலும், ஐ. பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
அமலாக்கத்துறை நோட்டீசை ரத்து செய்யக்கோரி ஐ பெரியசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவரின் மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ததை எதிர்த்து பெரியசாமி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு கடந்த ஜனவரி 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டிருந்தது.
தற்போது அமலாக்கத்துறை நோட்டீஸ்க்கு எதிரான வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஐ. பெரியசாமி சொத்து குவிப்பு வழக்கின் 2 முக்கிய வழக்குகள் அடுத்தடுத்து தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அமலாக்கத்துறை விசாரணையை துரிதப்படுத்துவார்கள் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications