நீட் ஜெஇஇ நுழைவுத்தேர்வுகள்... ஒத்தி வைப்பு இல்லை... மனு தள்ளுபடி... எப்போது தேர்வு!!
டெல்லி: தேர்வு நடத்தும் விதிமுறைகளில் தலையிடுவது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என்றும், வழக்கம் போல் தேர்வுகள் நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. இதையடுத்து, நீட் மற்றும் ஜெஇஇ நுழைவுத் தேர்வுகளை ஒத்தி வைக்கக் கோரி தாக்கல் செய்திருந்த மனுவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
கொரோனா வைரஸ் பரவல் கடுமையாக இருப்பதால் நீட் மற்றும் ஜெஇஇ நுழைவுத் தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அலக் அலோக் ஸ்ரீவஸ்தா மனு தாக்கல் செய்திருந்தார். நாட்டின் 11 மாநிலங்களில் இருந்து 11 மாணவர்கள் சார்பில் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

தேசிய தேர்வு முகமை இந்த தேர்வுகள் நடத்துவது தொடர்பாக மூன்று முறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதையடுத்து இந்த மாணவர்கள் சார்பில் தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச், ''கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வாழ்க்கையை நிறுத்தி வைக்க முடியாது. கல்விக் கொள்கையில் தலையிடுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. நீட் மற்றும் ஜெஇஇ தேர்வுகளை ஒத்தி வைத்தால் மாணவர்களின் எதிர்காலம் ஆபத்தில் முடியும். நடப்பு கல்வியாண்டும் பாதிக்கப்படும்'' என்றனர்.
இதையடுத்து, மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13ம் தேதி நடைபெறும். ஜெஇஇ முதன்மைத் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்வு ஒத்திவைப்பா என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications