ஜாதி ரீதியான இடஒதுக்கீட்டிற்கு.. காலக்கெடு விதிக்க முடியாது.. உச்ச நீதிமன்றம் அதிரடி.. மனு தள்ளுபடி!
டெல்லி: இந்தியாவில் ஜாதி ரீதியான இடஒதுக்கீடு விதிக்க வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்தியாவில் பின்பற்றப்பட்டு வரும் ஜாதி ரீதியான இடதுக்கீட்டை நீக்க வேண்டும் அல்லது புதிய பொருளாதார இடஒதுக்கீடு முறையை கொண்டு வர வேண்டும் என்று பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்திலும் மற்ற பல நீதிமன்றங்களிலும் தொடுக்கப்பட்டு இருக்கின்றன.

இது போன்ற வழக்குகள் ஒவ்வொரு முறை தள்ளுபடி செய்யப்பட்டாலும் புதிய கோரிக்கைகளோடு பல வழக்குகள் இடஒதுக்கீட்டிற்கு எதிராக பதியப்பட்டு வருகின்றன. அந்த வகையில் டாக்டர் சுபாஷ் விஜய்ரன் என்ற மருத்துவர் ஜாதி ரீதியான இடஒதுக்கீடு முறைக்கு எதிராக வழக்கு தொடுத்தார்.
இந்தியாவில் பின்பற்றப்படும் ஜாதி ரீதியான இடஒதுக்கீட்டிற்கு காலக்கெடு விதிக்க வேண்டும். இன்னும் எத்தனை வருடங்கள் இந்த ஜாதி ரீதியான இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படும் என்று தேதி குறிக்கப்பட்டு கெடு விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைத்தார்.
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள், எல் நாகேஸ்வர ராவ், ஸ்ரீபதி ரவீந்திர பாட் ஆகியோரின் அமர்வு விசாரணை செய்தது. மனுவை விசாரித்த சில நிமிடங்களில், இந்த மனுவில் நாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை.
இந்த ஜாதி ரீதியான இடஒதுக்கீட்டிற்கு காலக்கெடு விதிக்க முடியாது, நாங்கள் மனுவை தள்ளுபடி செய்ய போகிறோம் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். ஆனால் நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்ய போவதாக கூறியதை அடுத்து, டாக்டர் சுபாஷ் விஜய்ரன் தானாக தனது மனுவை வாபஸ் வாங்கினார்.












Click it and Unblock the Notifications