ஆபரேஷன் சிந்தூர் பற்றி சர்ச்சை.. 'சீப் பப்ளிசிட்டி'! அசோகா பல்கலை. பேராசிரியருக்கு நீதிமன்றம் நறுக்
டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டிருந்ததாக, அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது செய்யப்பட்டிருந்தார். அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ள உச்சநீதிமன்றம், அவரது செயலை மலிவான விளம்பரம் என்று விமர்சித்திருக்கிறது.
பஹல்காம் தாக்குதலில் சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதையும், வலதுசாரி கும்பல்களால் சிலர் அடித்து கொல்லப்பட்டதையும் ஒப்பிட்டு பேராசிரியர் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக பாஜக இளைஞர் அணி சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் கைது செய்யப்பட்டார்.

ஹரியானா மாநிலத்தில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் தலைவராகவும், இணை பேராசிரியராகவும் அலி கான் மஹ்முதாபாத் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் ஆபரேஷன் சிந்தூர் பற்றி பதிவிட்டிருந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்ட நிலையில், ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி காந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
விசாரணையில் நீதிபதிகள் கூறுகையில், "அனைவருக்கும் பேச்சு சுதந்திரம் இருக்கிறது. ஆனால் வகுப்புவாதம் பற்றி பேச வேண்டிய நேரமா இது? நாடு ஒரு பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளது. அரக்கர்கள் எல்லா வழிகளிலும் வந்து நம்மை தாக்கினர். இந்த தாக்குதலுக்கு எதிராக நாங்கள் ஒற்றுமையாக இருந்தோம். இப்படியான சூழலில் ஏன் மலிவான விளம்பரத்தை பெற, சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்?
எல்லோரும் கருத்துரிமையை பற்றி பேசுகிறீர்கள். ஆனால் 75 ஆண்டுகளாக அது கொடுக்கப்பட்டுதான் வந்திருக்கிறது. இந்த விவகாரத்தில் பேராசிரியர் குறியீட்டு மொழியை (Dog-Whistling) பயன்படுத்தியுள்ளார். அதாவது எந்த தரப்பினருக்கு மட்டும் புரியுமோ அதே மாதிரி பேசியிருக்கிறார். நடுநிலையான, மரியாதை மிக்க சொற்களை பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
மற்றவர்களை அவமதிக்க அல்லது அவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் வேண்டுமென்றே வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பது சிக்கல்தான். பேராசிரியருக்கு இது பற்றி ஏற்கெனவே தெரிந்திருக்க வேண்டும். மற்றவர்களைப் புண்படுத்தாமல் எளிமையான நடையில் அதே உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்க முடியும். மற்றவர்களின் உணர்வுகளுக்கு கொஞ்சம் மரியாதை கொடுங்கள். மற்றவர்களை மதித்து, எளிமையான மற்றும் நடுநிலையான மொழி நடையை பயன்படுத்துங்கள்" என்று நீதிபதிகள் அமர்வு கூறியிருக்கிறது.
பேராசிரியர் தரப்பில் வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராகியிருந்தார். "பேராசிரியரின் பதிவில் எந்த குற்ற நோக்கமும் கிடையாது. அவரது பதிவில் கடைசியில் ஜெய் ஹிந்த் என்று முடித்திருக்கிறார்" என்பதை விளக்கியிருந்தார். இதனையடுத்து பல வாதங்களுக்கு பின்னர் நிபந்தனையுடன் பேராசிரியருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. வழக்கு தொடர்பாக சோஷியல் மீடியாக்களில் எந்த பதிவையும் போடக்கூடாது, ஆபரேஷன் சிந்தூர் பற்றியும் எழுத கூடாது என்று நீதிமன்றம் நிபந்தனைகளை விதித்திருக்கிறது.
ஜாமீன் வழங்கப்பட்டாலும் கூட, இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஹரியானா அல்லது டெல்லியைச் சாராத மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை 24 மணி நேரத்திற்குள் அமைத்து, பேராசிரியரின் பதவியின் உண்மையான அர்த்தத்தை விளக்க வேண்டும் என்றும், ஹரியானா டிஜிபிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சிறப்பு விசாரணைக் குழுவில் ஒரு அதிகாரி ஒரு பெண்ணாக இருக்க வேண்டும். சிறப்பு விசாரணைக் குழு ஒரு ஐஜி அந்தஸ்து அதிகாரியின் தலைமையில் இருக்க வேண்டும், மற்ற இரண்டு உறுப்பினர்கள் எஸ்பி அந்தஸ்தில் இருக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications