எச்.எல்.தத்துவை அன்று கடுப்பாக்கிய ராகுல் காந்தி குடியுரிமை விவகாரம்.. ஒரு பிளாஷ்பேக்
டெல்லி: ராகுல் குடியுரிமை பிரச்சனை இப்ப மட்டுமில்ல ஏற்கனவேயும் ஒரு முறை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடியாகியுள்ளது.
ராகுல் காந்தி இங்கிலாந்திலும் குடியுரிமை பெற்றுள்ளார். ஆகவே அவர் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இப்படி உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தள்ளுபடி செய்வது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடதக்கது.
ராகுல் காந்தி 2005 மற்றும் 2006-ம் ஆண்டு இங்கிலாந்தின் பேக்காப்ஸ் நிறுவனத்தில் ஆண்டு வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்தபோது இங்கிலாந்து குடியுரிமை பெற்றுள்ளார். அவரை இந்த குடியுரிமை குறித்து நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவரை இந்த மக்களவை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது என்றும் கேட்டு டெல்லியைச் சேர்ந்த ஜெய் பகவான் கோயல், சந்தர் பிரகாஷ் தியாகி ஆகியோரும் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனு உரிய ஆதாரங்கள் இல்லையென்று கூறி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. 2015 ம் ஆண்டும் இதுபோல ஒரு சம்பவம் நடைபெற்றது. வழக்கறிஞர் எம்.எல் சர்மா என்பவர் ராகுல் காந்திக்கு இங்கிலாந்திலும் குடியுரிமை உள்ளது. இது குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு அப்போது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த ஹெச்.எல்.தத்து, மற்றும் நீதிபதி அமித்தவ ராய் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.
தொடர்ந்து ராஜீவ் காந்தியை விமர்சிக்கும் மோடி.. கோபத்தில் ராகுல் காந்தி.. வழக்கு தொடுக்க முடிவு!
அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள் மனுவை தாக்கல் செய்த வழக்கறிஞரை பார்த்து "நீங்கள் தாக்கல் செய்த மனு அற்பமானது. எந்தவித சம்பந்தமும் இல்லாத விசாரணைகளைத் தொடங்குவதற்காக வழக்கு தொடர்ந்துள்ளீர்கள். தனி மனிதர்களுக்கு எதிராகவோ, அல்லது அமைப்புகளுக்கு எதிராகவோ பொதுநல மனு இருத்தல் கூடாது, ஒரு பொதுநலமனு நல்ல நிர்வாகத்தின் மூலம் மனிதர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் ஊடகமாக இருக்க வேண்டும். நீங்கள் தாக்கல் செய்த மனுவுக்கான ஆதாரங்கள், மனுவில் இணைந்துள்ள ஆவணங்களின் மூலத்தைக் கேள்விக்குள்ளாகுகிறது. பொதுநல மனு சிறிது உணர்வுபூர்வமாக மக்களை துன்பத்தில் இருந்து மீட்பதாக இருக்க வேண்டும்" என்று காட்டமாக கூறினர்,
இருந்தாலும் வழக்கறிஞர் சர்மா இந்த மனுவை மீண்டும் பரிசீலனைக்கு எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினார். இதைக் கேட்ட எரிச்சல் அடைந்த தலைமை நீதிபதி ஹெச்எல் தத்து, "நிறுத்துங்கள், நான் இன்னும் 2 நாட்கள் மட்டுமே பணியில் இருப்பேன். என்னைத் தேவையில்லாமல் மிகப்பெரிய அபராதத்தை உங்கள் மீது விதிக்கத் தூண்டாதீர்கள்" என்று கூறினார். பின்னர் டிசம்பர் 2-ம் தேதி தலைமை நீதிபதி ஹெச்எல் தத்து ஓய்வு பெற்றார்.
இப்போது மீண்டும் அதே பிரச்னையை கையில் எடுத்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மீண்டும் உச்ச நீதிமன்றத்தால் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.