நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில் போராடக்கூடாது... சொல்வது உச்சநீதிமன்றம்... எதுக்கு தெரியுமா!
டெல்லி: நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில் போராட்டம் நடத்த முடியாது'என ஷாகின்பாக் போராட்டம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
போராடுவதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் போராட்டங்களை நடத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
டெல்லியில் ஷாகின்பாக் என்ற இடத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கடந்த 2019-ம் ஆண்டு போராட்டம் நடத்தினர்.

ஷாகின்பாக் போராட்டம்
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தலைநகர் டெல்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் முதல் 5 மாதங்கள் கடும் போராட்டம் நடந்தது. . போராட்டக்காரர்களுடன் அரசு பலமுறை பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் பலனில்லை. டெல்லியின் ஷாகின்பாக் என்ற இடத்தில் போராட்டம் தீவிரமாக நடந்தது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
இதற்கிடையே ஷாகின்பாக் போராட்டத்தால் அப்பகுதி மக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'பொது இடத்தை போராட்டக்காரர்கள் காலவரையின்றி ஆக்கிரமித்து போராட்டம் நடத்துவது ஏற்புடையதல்ல' என உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்கள் செய்யப்பட்டன.

உரிமையை பாதிக்கக் கூடாது
இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ''ஒரு சட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்த மக்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், அது இதர மக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்ற முந்தைய தீர்ப்பின் பரிந்துரையை ஏற்றுக் கொள்கிறோம். போராடும் உரிமை என்பது சில கடமைகளுக்கு உட்பட்டதாகும். போராட்டம் எனும் பெயரில் பொது இடத்தை தொடர்ந்து ஆக்கிரமித்து பிறருக்கு இடையூறு செய்தல், அவர்களின் உரிமையை பாதிப்பதாகும்.

நினைத்த இடத்தில் போராடக் கூடாது
எனவே, நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில் போராடும் உரிமை எப்போதும், எந்த நேரத்திலும் இருக்க முடியாது. பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில், போராடுவதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் போராட்டங்களை நடத்த வேண்டும்,' என உத்தரவிட்டனர். மேலும், சீராய்வு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தனர். வேளாண் சட்டங்களை கண்டித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஷாகின்பாக் தீர்ப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications