இலங்கை சிறையில் எத்தனை தமிழக மீனவர்கள்? மத்திய அரசு பதில் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: இலங்கை சிறையில் எத்தனை தமிழக மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்? இலங்கை கடற்படை எத்தனை தமிழக மீனவர்களை விடுதலை செய்தது என்கிற விவரங்களை 2 வாரத்துக்குள் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரியமான மீன்பிடி பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர். ஆனால் இலங்கை கடற்படையோ தமிழக மீனவர்கள் தங்களது எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோதமாக மீன்பிடிப்பதாக குற்றம்சாட்டி கைது செய்து வருகின்றனர். தமிழக மீனவர்களை தமிழ்நாட்டு எல்லைக்குள் நுழைந்து அத்துமீறி கைது செய்வதையும் இலங்கை கடற்படை வாடிக்கையாக வைத்துள்ளது.

நடுக்கடல் படுகொலை
இலங்கை கடற்படையால் இதுவரை சுமார் 800 தமிழக மீனவர்கள் நடுக்கடலில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இதுநாள் வரை மத்திய அரசு எந்த ஒரு கண்டனமும் தெரிவிக்கவில்லை. இலங்கை கடற்படை மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு வழக்கு கூட பதியவும் இல்லை. ஆனால் குஜராத் மீனவர் ஒருவர் அண்மையில் பாகிஸ்தான் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட போது கடுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.

கச்சத்தீவு பிரச்சனை
தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீண்டும் பெறுவதும் ஒரு வழி என்பது தமிழகத்தின் நிலைப்பாடு. தமிழ்நாட்டுக்கு சொந்தமான கச்சத்தீவு, மத்திய அரசால் இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது. தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதி இது. ஆகையால் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற வழக்கும் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது.

விடாது கைது நடவடிக்கை
இருந்த போதும் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும் அவர்களது படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருந்தார். அதில், கடந்த ஜூன் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக 5-வது முறையாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை வெகுவாக பாதிப்பதிக்கிறது. தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் எத்தனை பேர்? சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் எத்தனை பேர்? விடுதலை செய்யப்பட்டோர் விவரங்கள் ஆகியவற்றை 2 வார காலத்தில் மத்திய அரசு பதில் மனுவாகத் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications