அதிமுகவுக்கு ஒற்றை தலைமை ஏன்?.. உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்ட கேள்வி.. தமிழ் மகன் உசேன் அளித்த பதில்
டெல்லி: அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை ஏன் என்பது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தரப்பு விளக்கமளித்துள்ளது.
சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பளித்தார். ஒபிஎஸ்ஸுக்கு ஆதரவாக அமைந்த இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் எடப்பாடி பழனிசாமி.
அந்த மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. அப்போது ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக் குழு செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.

நீதிபதிகள்
இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் மகேஸ்வரி, ரிஷிகேஷ் சாய் ஆகியோர் அமர்வு முன்பு 5 ஆவது நாளாக இன்றைய தினம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த நாட்களில் ஓபிஎஸ் தரப்பு, ஓபிஎஸ் ஆதரவாளர் வைரமுத்து தரப்பு விளக்கத்தை கேட்ட நீதிபதிகள் அதிமுக வழக்கை நேற்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார்கள்.

எடப்பாடி பழனிசாமி வாதம்
நேற்று மதியம் தொடங்கிய இந்த விசாரணையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதங்களை நீதிபதிகள் கேட்டனர். அப்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்யும் அதிகாரம் பொதுக் குழுவுக்கு இருக்குமேயானால் , அந்த பதவிகளை நீக்கும் அதிகாரம் மட்டும் ஏன் பொதுக் குழுவுக்கு இருக்கக் கூடாது என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கேள்வி எழுப்பியது.

ஒத்திவைப்பு
இதையடுத்து அந்த வழக்கு இன்றைய தினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. இன்று அதிமுக தலைமை அலுவலகம் சார்பில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தரப்பு மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி தன் வாதங்களை முன் வைத்தார். அப்போது நீதிபதிகள் அவரிடம் ஒற்றைத் தலைமை ஏன் என விளக்கம் கேட்டனர். அதற்கு அவைத் தலைவர் தரப்பு வழக்கறிஞர் , கட்சியின் நலன் கருதியே இரட்டைத் தலைமை முறை முதலில் கொண்டு வரப்பட்டது.

அவைத் தலைவர்
ஆனால் தற்போது அந்த இரட்டைத் தலைமை முறையால் முடிவெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பன்னீர் செல்வத்தை விட பழனிசாமிக்கே ஆதரவு அதிகமாக உள்ளது. உரிய முறையில் பொதுக் குழு கூட்டி ஒற்றைத் தலைமை பற்றி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தேவைப்படும்போது எப்போது வேண்டுமானாலும் அதிமுக பொதுக் குழுவை கூட்டலாம். பொதுக்குழுவில் உரிய விதிமுறைகளை பின்பற்றியே ஒற்றைத் தலைமை முறை குறித்து முடிவெடுக்கப்பட்டது. பொதுக் குழுவே உச்சபட்ச அதிகாரம் படைத்தது. கட்சியில் பொதுக் குழு எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்பதே விதி. எனவே இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டிய தேவையே இல்லை என முகுல் ரோத்தஹி வாதிட்டார்.












Click it and Unblock the Notifications