பிரதமர் மோடி பஞ்சாப் பயண பாதுகாப்பு சர்ச்சை- ஃபெரோஸ்பூர் எஸ்பி பொறுப்பு- உச்சநீதிமன்றத்தில் அறிக்கை
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயண பாதுகாப்பு தொடர்பான சர்ச்சையில் அம்மாநில ஃபெரோஸ்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் தான் பொறுப்பு என்று உச்சநீதிமன்றத்தில் ஐவர் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
பிரதமர் மோடி கடந்த ஜனவரி மாதம் பஞ்சாப் மாநிலத்தில் ரூ42,750 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்க இருந்தார். பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோஸ்பூரில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருந்தது. மேலும் ஹுசைனிவாலா தியாகிகள் நினைவிடத்துக்குச் செல்லவும் பிரதமர் மோடி திட்டமிட்டிருந்தார்.

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவுக்கு விமானம் மூலம் வந்திறங்கினார் பிரதமர் மோடி. அங்கிருந்து ஹூசைனிவாலாவுக்கு ஹெலிகாப்டரில் செல்ல முதலில் பிரதமர் மோடி திட்டமிட்டிருந்தார். ஆனால் வானிலை சீராகாத நிலையில் சாலை மார்க்கமாக செல்ல பிரதமர் மோடி முடிவு செய்தார்.
இதையடுத்து காரில் பிரதமர் மோடி சென்றுக்கொண்டிருந்த போது, மேம்பாலம் ஒன்றில் போராட்டக்காரர்கள் சாலையை மறித்து போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். இதனால் பிரதமர் மோடியின் வாகனம், அந்த மேம்பாலத்தில் சுமார் 20 நிமிடங்கள் நிற்க நேரிட்டது. இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு பிரதமர் மோடி டெல்லி திரும்பினார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையாக வெடித்தது.
பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடிக்கு அப்போதைய பஞ்சாப் காங்கிரஸ் அரசுதான் காரணம் என குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் காங்கிரஸ் அரசு இதை நிராகரித்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 5 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்தது.
பிரதமர் மோடியின் பாதுகாப்பில் நிகழ்ந்த குளறுபடிகள் தொடர்ந்த இந்த ஐவர் குழு ஆய்வு செய்தது. இக்குழு இன்று தமது அறிக்கையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் முன்பாக தாக்கல் செய்தது. இக்குழுவின் அறிக்கையை சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா, பாதுகாப்பு குளறுபடிகளுக்கு ஃபெரோஸ்பூர் காவல்துறை கண்காணிப்பாளர்தான் பொறுப்பு; அவர் தமது கடமையை சரியாக செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் இந்த அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்; அதனடிப்படையில் மத்திய அரசு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறினார்.












Click it and Unblock the Notifications