ராஜேந்திர பாலாஜிக்கு சிக்கல்...சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு
டெல்லி: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் 3-வது நீதிபதி விசாரிக்க தடை இல்லை என உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் இந்த வழக்கில் 3-வது நீதிபதி எந்த உத்தரவையும் பிறப்பிக்கவும் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கே.டி.ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்தபோது 2011-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாக ரூ7 கோடி சொத்து குவித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் பெஞ்ச் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பு வழங்கியது. முதலில் தீர்ப்பை வாசித்த நீதிபதி சத்தியநாராயணன், சொத்து குவிப்பு புகார் குறித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால், நீதிபதி ஹேமலதா, நீண்ட இடைவெளிக்கு பிறகு வழக்கு பதிந்து விசாரிப்பது தேவையற்றது. செத்த குதிரையின் மீது சவுக்கடி கொடுப்பது போன்றது; மேற்கொண்டு விசாரிப்பதால் எவ்வித பலனும் இல்லை எனக் கூறி மகேந்திரன் வழக்கை தள்ளுபடி செய்தார்.
இரண்டு நீதிபதிகள் முரண்பாடான தீர்ப்பு அளித்ததையடுத்து 3-வது நீதிபதியாக நிர்மல்குமார் நியமிக்கப்பட்டார். ஆனால் 3-வது நீதிபதிக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது.
இவ்வழக்கில், 3-வது நீதிபதியின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்தனர். அதே நேரத்தில் ராஜேந்திர பாலாஜி வழக்கில் 3-வது நீதிபதி எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது எனவும் இடைக்கால தடை விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இவ்வழக்கில் தமிழக அரசு பதில் மனுத் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications