சபரிமலையில் அனைத்து பெண்களையும் அனுமதித்ததை எதிர்த்து மறுசீராய்வு மனு.. நாளை காலை தீர்ப்பு
டெல்லி: சபரிமலை கோயிலில் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதித்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மறுசீராய்வு மனு மீது நாளை காலை 10.30 மணிக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்குகிறது.
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில். உலக பிரசித்தி பெற்ற இந்த திருத்தலத்தில் காலம்காலமாக 10 வயது முதல் 50 வயதுக்குள்பட்ட பெண்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது இல்லை.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, அனைத்து வயதினரும் சபரிமலை கோயிலுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி வரலாற்றுச் சிறப்புவாய்ந்த ஒரு தீர்ப்பை வழங்கியது.

இரு பெண்கள்
இதற்கு கேரளத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். எனினும் போலீஸ் பாதுகாப்புடன் கேரளத்தை சேர்ந்த கனகதுர்கா, பிந்து ஆகிய மாதவிடாய் பருவத்தில் உள்ள இரு பெண்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பணி ஓய்வு
இந்த நிலையில் இந்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரி கேரளத்தை சேர்ந்த நாயர் சர்வீஸ் சொசைட்டி அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17-ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார்.

கேரளத்தில் பரபரப்பு
70 ஆண்டுகால அயோத்தி வழக்கில் கடந்த சனிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. அது போல் 17-ஆம் தேதிக்குள் சபரிமலை விவகாரம் உள்ளிட்டவற்றில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நாளை காலை 10.30 மணிக்கு மறுசீராய்வு மனு மீது உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதாக தற்போது அறிவித்துள்ளது. இதனால் கேரளத்தில் மீண்டும் பரபரப்பான சூழல் எழுந்துள்ளது.

ஆச்சார்யாக்கள்
பல லட்சக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையை சிதைக்கும்படியான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கக் கூடாது என பக்தர்கள் கூறுகின்றனர். மேலும் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது குறித்த முடிவை நம்பூதிரிகள், ஆச்சார்யாக்களிடமே விட்டு விட வேண்டும், இதில் கோர்ட் தலையிடக் கூடாது என்கின்றனர். ஏற்கெனவே உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு வழங்கிய தீர்ப்பை ரஞ்சன் கோகாய் அமர்வு உறுதி செய்கிறதா இல்லை பெண்கள் அனுமதிக்கு எதிரான பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தீர்ப்பு வழங்குகிறதா என்பது நாளை தெரியவரும்.












Click it and Unblock the Notifications