உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு எதிர்ப்பு வழக்குகள்: உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் விசாரணை
டெல்லி: உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட பல வழக்குகள் மீது உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் விசாரணை நடைபெற உள்ளது.
சமூகம், பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதுதான் சமூக நீதி என்பதால் இந்திய அரசியல் சாசனமும் இதனை உறுதி செய்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டுக்காகதான் இந்திய அரசியல் சாசனம் முதன் முதலாக திருத்தப்பட்டது. இந்தத் திருத்தத்துக்காக போராடியது தந்தை பெரியார்தான்.

காலந்தோறும் இந்த இடஒதுக்கீட்டை உயர்ஜாதியினர் எனப்படும் முற்பட்ட வகுப்பினர் கடுமையாக எதிர்த்து வந்தனர். மத்திய அரசு கல்வி, வேலைவாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கியது மண்டல் கமிஷன். இதனை எதிர்த்து உயர்ஜாதி எனப்படுகிற முற்பட்ட வகுப்பு மாணவர்கள் போராட்டம் நடத்தி தீக்குளித்த கொடுமையும் இந்தியாவில்தான் அரங்கேறியது.
ஆனால் காலம் மாற உயர்ஜாதி எனப்படும் முற்படுத்தப்பட்டோரும் இடஒதுக்கீடு கோரினர். இதனடிப்படையில்தான் உயர்ஜாதி எனப்படும் முற்படுத்தப்பட்டோரில் பொருளாதார ரீதியான பின்தங்கிய ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் 3 ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டுவரப்பட்டது. இதற்காக அரசியல் சாசனத்தின் 103-வது பிரிவில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
பொதுவாக இடஒதுக்கீடு வழக்குகளில் இடஒதுக்கீடு அளவானது 50%-த்தை தாண்டக் கூடாது என்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு. மத்திய அரசு உயர்ஜாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கியதன் மூலம் இந்த 50% இடஒதுக்கீடு வரம்பு மீறப்பட்டிருக்கிறது. இதனை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
நாட்டின் அரசியல் சாசனத்தில் சமூக- கல்வி அடிப்படையில்தான் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது; ஆனால் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தவில்லை என இந்த வழக்குகளில் சுட்டிக்காட்டபபட்டிருந்தது. திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி, விசிக தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவன் உள்ளிட்டோரும் இவ்வழக்கை தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகளை தலைமை நீதிபதி யுயு லலித் தலைமையிலான பெஞ்ச் இன்று முதல் விசாரிக்க உள்ளது.












Click it and Unblock the Notifications