முடிவுக்கு வருமா சிறைவாசம்.. ப சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பளிக்கிறது உச்ச நீதிமன்றம்
டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு 100 நாட்களை கடந்து டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நாளை உச்ச நீதிமன்றம் அறிவிக்கிறது.
இந்திராணி முகர்ஜியின் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய நிதி முதலீட்டை முறைகேடாக அனுமதித்தாக சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் ப. சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21-ந் தேதி கைது செய்யப்பட்டார்.அதன்பிறகு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிபிஐ தொடர்ந்த இந்த வழக்கில் ப. சிதம்பரத்துக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜாமீன் கிடைத்தது.

அமலாக்கத்துறை
ஆனால் அதற்கு சில நாட்கள் முன்னரே சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் டெல்லி திகார் சிறையில் இருந்த ப. சிதம்பரத்தை கைது செய்தனர்.

சிறப்பு நீதிமன்றம்
இதனால் ப சிதம்பரம் சிறையில் இருந்து வெளிவர முடியவில்லை. இந்நிலையில் அமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கோரி சிதம்பரம் தாக்கல் செய்த மனுக்களை சிபிஐ சிறப்பு நீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம் ஆகியவை தள்ளுபடி செய்துவிட்டன.

ப சிதம்பரம் மனு
உச்சநீதிமன்றத்தில் ப. சிதம்பரம் மேல்முறையீடு செய்துள்ளார். அமலாக்கப் பிரிவு தரப்பில் ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் தர கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டது. சிதம்பரத்தை ஜாமீனில் விடுதலை செய்தால் சாட்சியங்களை கலைத்துவிடுவார் எனவும் அமலாக்கப் பிரிவு தரப்பு வாதிட்டிருந்தது.. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்து இருந்தனர்.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
இந்நிலையில் ப சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நாளை அறிவிப்பதாக அறிவித்துள்ளது. இதனால் நாளை ப சிதம்பரம் சிறையில் இருந்து வெளிவருவாரா அல்லது தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டியது வருமா என்பது நாளை தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications