சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம்- நிலம் கையகப்படுத்த ஹைகோர்ட் விதித்த தடை தொடரும்: உச்சநீதிமன்றம்
டெல்லி: சென்னை- சேலம் இடையேயான 8 வழி நெடுஞ்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை தொடரும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.
Recommended Video
சென்னை- சேலம் இடையே ரூ10,000 கோடி மதிப்பீட்டில் 277.3 கிமீ தொலைவுக்கு 8 வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த சாலையானது சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் மாவட்டங்களின் வழியே அமைக்க முடிவு செய்யப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணியும் நடைபெற்றது.
நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. சென்னை, தூத்துக்குடி, டெல்டா மாவட்டங்களில் செம மழை
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
ஆனால் இத்திட்டத்துக்காக விளைநிலங்கள், நீர் நிலைகள், மலைகளை அழிக்கும் ஆபத்து உள்ளதாக விவசாயிகள் போராட்டங்களை நடத்தினர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.
ஹைகோர்ட் தடை
இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரல் 8-ந் தேதி சென்னை-சேலம் 8வழி சாலை திட்டத்துக்கு தடை விதித்து தீர்ப்பளித்தது. இத்தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசும் இந்திய நெடுஞ்சாலை துறையும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.
உச்சநீதிமன்றத்தில் விசாரணை
உச்சநீதிமன்றத்தில் முதலில் இந்த வழக்கை நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. நீதிபதி அருண் மிஸ்ரா ஓய்வு பெற்ற நிலையில் நீதிபதிகள் கான்வில்கர், பிஆர் கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இவ்வழக்கை விசாரித்து அக்டோபர் மாதம் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது.
தடை நீடிக்கும்- உச்சநீதிமன்றம் தீர்ப்பு
இந்த வழக்கில் இன்று நீதிபதி கான்வில்கர் தலைமையிலான பெஞ்ச் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பில், சென்னை-சேலம் 8 வழி சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை உறுதி செய்யப்பட்டது; மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தடைக்கு எதிரான அனைத்து மேல்முறையீட்டு மனுக்களையும் உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது.
திட்டத்துக்கு தடை இல்லை
அதேநேரத்தில் சென்னை- சேலம் 8 வழி சாலை திட்டத்துக்கு தடையில்லை என்றும் புதிய அரசாணை வெளியிடவும் தேவையான சுற்றுச் சூழல் அனுமதி பெறவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய அறிவிக்கை மூலமே நிலங்களை வகை படுத்த முடியும் என்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.