மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. மறு உத்தரவு வரும்வரை பள்ளிகள் மூடல்.. காற்று மாசு எதிரொலி.. தலைநகரில்!
டெல்லியில் மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லி: காற்று மாசு எதிரொலியால் டெல்லியில் மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தமுறை தீபாவளி பண்டிகை முடிந்ததுமே ஒரு செய்தி வெளியானது.. அதன்படி, தீபாவளி பண்டிகைக்கு பின்னான தரவுகளின் அடிப்படையில் டெல்லியில் காற்று மாசுபாட்டின் அளவு அபாயகரமான அளவை எட்டியிருந்தது.
டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்திய பகுதிகளில் கடும் பாதிப்பும் ஏற்பட்டுள்ளதால், காற்று மாசை குறைக்க தண்ணீரை தெளிக்கும் நடவடிக்கைகளும் கையில் எடுக்கப்பட்டுள்ளன..

வேளாண் அறுவடை
அதாவது, வேளாண் அறுவடைக்கு பிறகு, டெல்லி மற்றும் சுற்றியுள்ள பிராந்தியங்களில், தேவையற்ற பயிர்க்கழிவுகளை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாலும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையாலும் காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.. அதனால்தான் டெல்லியில், இதுவரை இல்லாத அளவுக்கு காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளது.

தர நிர்ணய ஆணையம்
இந்நிலையில், தர நிர்ணய ஆணையம் பிறப்பித்த உத்தரவில் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்களில் மறு உத்தரவு வரும் வரை பள்ளி, கல்லூரிகளை மூடிவிட்டு ஆன்லைன் வகுப்புகளுக்கு திரும்புமாறு அறிவிப்பு வெளியாகி உள்ளது.. டெல்லி அதன் சுற்றுப்புறங்களில் உள்ள நகரங்களில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளன. இதுபோலவே ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேச மாநிலங்களில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் 50% பேரை வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாகனங்கள்
அதேபோல, வரும் 21ம் தேதி வரை கட்டுமானப் பணிகள், கட்டிடங்கள் இடிப்பு பணிகளுக்கும், தடை விதிக்கப்பட்டுள்ளது.. அத்தியாவசியப் பொருட்களை கொண்டு வரும் ட்ரக்குகளை தவிர மற்ற டிரக்குகளை டெல்லிக்குள் அனுமதிக்கவும் நவம்பர் 21ம் தேதி தடை விதிக்கப்பட்டுள்ளது... 15 வருடங்கள் பழமையான பெட்ரோல், 10 வருடங்கள் பழமையான டீசல் வாகனங்கள் பயன்படுத்தவும் இனி அனுமதி கிடையாது... எனினும் டெல்லியில் உள்ள 11 அனல் மின் நிலையங்களில் 5 மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காற்று மாசு
டெல்லியில் காற்று தர குறியீடு இன்று 379 ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது... டெல்லியில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு பிறகு காற்று மாசு தீவிரமான அளவை கடந்த நிலையில் இப்போது இது அபாயகரமான அளவு என்கிறார்கள். காற்று மாசு குறித்து சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணையும் நடந்து வரும் நிலையில், தேவைப்பட்டால் காற்று மாசை தடுக்க முழு ஊரடங்கை அமல்படுத்தி கொள்ளுங்கள் என்று டெல்லி அரசுக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications