அறிவியல் பொய் சொல்லாது, ஆனால் மோடி சொல்கிறார்! கொரோனா பலி விவகாரத்தில் ராகுல்காந்தி சாடல்
டெல்லி: ‛‛அறிவியல் பொய் சொல்லாது. ஆனால் மோடி சொல்கிறார்'' என கொரோனா பலி தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் விபரங்களை மேற்கொள்காட்டி காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளார்.
Recommended Video
2019 இறுதியில் சீனாவில் கொரோனா பரவ துவங்கியது. அங்கிருந்து பல நாடுகளுக்கும் கொரோனா பரவியது. இந்தியாவில் கொரோனா 3 அலைகளாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் பாதிக்கப்பட்டவர்களில் ஏராளமானவர்கள் மீண்டுள்ளனர். அதேநேரத்தில் பல லட்சம் பேர் கொத்து கொத்தாக பலியாகி உள்ளனர். குறிப்பாக கொரோனா 2வது அலையின்போது ஏராளமானவர்கள் பலியாகினர்.
சென்னையில் வீடு தேடி வரும் சிலிப்.. கொரோனா தடுப்பூசி பணியை தீவிரப்படுத்தும் மாநகராட்சி
உலக சுகாதார நிறுவனம்
இந்நிலையில் தான் உலகளவில் ஏற்பட்ட கொரோனாவால் ஏற்பட்ட பலிகளை சில நாடுகள் மறைத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து ஒட்டுமொத்த உலகிலும் கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கீட உலக சுகாதார அமைப்பு முடிவு செய்தது. அதற்கான பணியை மேற்கொண்டுள்ளது.
இந்தியாவில் பலி எவ்வளவு
அதில் ‛‛உலக சுகாதார அமைப்பின் கணக்கீட்டின்படி 2021 ஆண்டின் முடிவில் உலகம் முழுவதும் கொரோனாவால் ஒரு கோடியே 50 லட்சம் பேர் இறந்திருக்கலாம். இது அதிகாரப்பூர்வமாக காட்டப்பட்டுள்ள இறப்பு எண்ணிக்கையை விட 2 மடங்கு அதிகமாகும். இந்தியாவில் 2021 டிசம்பர் 31 வரை 4.8 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உண்மை நிலை என்னவென்றால் அது 47 லட்சமாக இருக்கலாம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொய் சொல்லும் மோடி
இந்நிலையில் தான் உலக சுகாதார அமைப்பின் தகவலை மேற்கொள்காட்டி இந்தியாவில் கொரோனா பலி மறைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி அவர் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 47 லட்சம் பேர் இறந்துள்ளனர். ஆனால் மத்திய அரசு 4.8 லட்சம் என கூறுகிறது. அறிவியல் பொய் சொல்லது. ஆனால் மோடி சொல்வார். அன்பிற்குரியவர்களை கொரோனாவால் இழந்துள்ள குடும்பங்களை மதியுங்கள். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்குங்கள்'' என கூறியுள்ளார்.
மத்திய அரசு எதிர்ப்பு
இதற்கிடையே மத்திய சுகாதார அமைச்சகம் உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கீட்டு முறைக்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. அதில், ‛‛ இந்தியாவின் புவியியல் அமைப்பு முற்றிலும் மாறுபட்டது. மக்கள் தொகை அதிகமுள்ள நாடாக இந்தியா உள்ளது. எனவே சிறிய மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஏற்பட்ட இறப்பை கணக்கிட பயன்படுத்தும் முறையை இந்தியாவுக்கு பயன்படுத்துவது பொருத்தமாக இருக்காது. இது கொரோனா பலி எண்ணிக்கையில் முரண்பாட்டை ஏற்படுத்திவிடுவதோடு, துல்லியத்தன்மையை கேள்விக்குறியாக்கும்'' என கூறியிருந்தது. இருப்பினும் இந்த விபரங்கள் வெளியாகி உள்ளது.