அதிர்ச்சி முடிவு.. கர்நாடக முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை ரத்து செய்தது தவறு! உச்சநீதிமன்றம் குட்டு
டெல்லி: கர்நாடாகவில் ஓபிசி இடஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட 4% இடஒதுக்கீட்டை அம்மாநில அரசு தவறான அனுமானதின் அடிப்படையில் ரத்து செய்து உள்ளதாகவும், இது அதிர்ச்சிகரமான முடிவு எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
விரைவில் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மே மாதம் நடைபெற உள்ள தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைக்க அக்கட்சி பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது.

அதே சமயம் கர்நாடகாவில் பெரும்பான்மை சமூகங்களாக இருக்கும் லிங்காயத்துகள் மற்றும் வோக்காலிகா ஆகியோர் மத்தியில் பாஜகவுக்கு அதிருப்தி நிலவி வந்தது. இந்த நிலையில் அவர்கள் தரப்பு ஆதரவை பெற லிங்காயத்து சமூகத்தை சேர்ந்த எடியூரப்பாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, வொக்காலிகா சமூகத்தை ஈர்க்க கற்பனை கதாபாத்திரங்களான உரி கவுடா, நஞ்சே கவுடாவுக்கு விழா எடுப்பது என பல்வேறு செயல்களில் பாஜக ஈடுபட்டு வருகிறது.
குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் உயர்சாதி ஏழைகளுக்காக வழங்கப்படும் பொருளாதார அடிப்படையிலான 10 சதவீத இடஒதுக்கீட்டில் 6 சதவீதத்தை வொக்காலிகா மற்றும் லிங்காயத்து சமூகத்திற்கு பிரித்து வழங்குவதாக அம்மாநில பாஜக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு பிராமண மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில்தான், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் வொக்காலிகா சமூகத்துக்கு 6 சதவீதம் மற்றும் லிங்காயத்து சமூகத்திற்கு 7 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டது. அத்துடன் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து அதை வொக்காலிகா மற்றும் லிங்காயத்து சமூகத்திற்கு பிரித்து வழங்கியது.
அதற்கு மாற்றாக இஸ்லாமியர்களையும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவுக்கான இடஒதுக்கீட்டில் கர்நாடக அரசு சேர்த்தது. இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்தன. கர்நாடக சட்டசபைத் தேர்தலின் காரணமாகவே இந்த முடிவை அம்மாநில அரசு எடுத்து இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த நிலையில் இஸ்லாமியர்களுக்கன 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்த கர்நாடக அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இஸ்லாமியர்களுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை கர்நாடக அரசு ரத்து செய்து இருப்பது முதற்கட்ட பார்வையில் அதிர்ச்சிரமாகவும், பிழையானதாவும் தெரிகிறது.
முற்றிலும் தவறான அனுமானத்தில் அடிப்படையில் கர்நாடக மாநில அரசு இந்த முடிவை எடுத்து இருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இந்த வழக்கு விசாரணை முடிவடையும் வரை எந்த பணி நியமனங்களோ, மாணவர் சேர்க்கைகளோ நடைபெறாது என்று மாநில அரசு உறுதியளித்ததை தொடர்ந்து ஏப்ரல் 18 ஆம் தேதி இந்த வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications