குற்றவியல் நடைமுறை மசோதா! கட்டாயப்படுத்தி ஒப்புதல் வாக்குமூலம் பெற வழிவகை! எஸ்.டி.பி.ஐ. எதிர்ப்பு!
டெல்லி: மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குற்றவியல் நடைமுறை (அடையாளம்) மசோதா 2022-க்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த மசோதா ஒப்புதல் வாக்குமூலத்தை கட்டாயப்படுத்தி பெறுவதற்கு சமமானது என அச்சம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சோசியல் டெமோக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் தேசியத் தலைவர் எம்.கே.பைஸி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

குற்றவியல் நடைமுறை
"குற்றம் அல்லது குற்றத்தின் தன்மையைப் பொருட்படுத்தாமல், குற்றவாளிகளின் உடல் மற்றும் உயிரியல் மாதிரிகளுடன் பயோமெட்ரிக் தரவுகளை சேகரிக்க காவல்துறைக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது. அமலில் இருக்கும் தற்போதைய சட்டங்களில், குறிப்பிட்ட வகை குற்றவாளிகள் மற்றும் தண்டனை பெறாத நபர்களின் விரல் மற்றும் கால் தடம் பதிவுகளை எடுக்க காவல்துறை அனுமதிக்கப்படுகிறது. ஆனால், இந்த சட்டத் திருத்த மசோதா இந்திய அரசியலமைப்பின் 20 மற்றும் 21 வது பிரிவுகளை மீறுவதாக உள்ளது.

ஒப்புதல் வாக்குமூலம்
மேலும், இது கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து "ஒப்புதல் வாக்குமூலத்தை கட்டாயப்படுத்தி" பெறுவதற்கு சமமானதாகும். தனியுரிமை ஒரு அடிப்படை உரிமையாகும். தற்போதைய ஒன்றிய அரசின் மசோதா இந்த தீர்ப்புகளுக்கு முரணாக உள்ளது. மேலும், இந்த மசோதா காவல்துறை சட்டத்தை தவறாகப் பயன்படுத்த வழிவகுக்கிறது. திருத்தப்பட்ட சட்டமூலத்தை தெரிவுக்குழுவிற்கு அனுப்பும் எதிர்க்கட்சிகளின் முன்மொழிவை ஏற்றுக்கொள்ளாத பாஜக அரசாங்கத்தின் நிலைப்பாடு, தற்போதைய ஆட்சியின் உண்மையான எதேச்சதிகார முகத்தை அம்பலப்படுத்துகிறது.

உள்துறை அமைச்சர்
"கொடூரமான குற்றங்களின் வழக்குகளில் மட்டுமே விதிகள் பயன்படுத்தப்படும்" என்று உள்துறை அமைச்சரின் விளக்கம் மக்களை முட்டாளாக்குவதற்கான உண்மையை மறைக்க முயலும் ஒரு முயற்சியாகும். தேசவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்தும் சட்டமாக கொண்டு வரப்பட்ட கடுமையான யு.ஏ.பி.ஏ., இப்போது கண்மூடித்தனமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டு எதிர்க் குரல்களையும் நசுக்குகிறது. தற்போதைய மசோதா, எதிர்ப்பாளர்களைக் குறிவைக்கும் மற்றொரு கொடூரமான சட்டத்தைத் தவிர வேறில்லை.

வரம்புகளை மீறாமல்
ஆகவே, அரசாங்கம் அதன் வரம்புகளை மீறாமல் சட்டங்களை இயற்றவும், மேலும், அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அதன் ஷரத்துக்களை பாதுகாக்கவும் உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டு அதை உறுதி செய்ய வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி கேட்டுக் கொள்கிறது." இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications