இந்த பக்கம் சீறும் மம்தா! அங்கே மகாராஷ்டிராவில் பிரச்சனையே புது ரகமா இருக்கே! சமாளிப்பாரா ராகுல்
டெல்லி: ஆம் ஆத்மி மற்றும் சமாஜ்வாதி கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்தாலும் கூட இன்னும் காங்கிரஸுக்கு மிகப் பெரிய பணி காத்திருக்கிறது. இது தொடர்பாக விரிவாகப் பார்க்கலாம்.
இன்னும் சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், காங்கிரஸ் தனது கூட்டணியை உறுதி செய்து தொகுதிப் பங்கீட்டை முடிக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே சமாஜ்வாதி மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் பணிகள் முழுமையாக முடியவில்லை. குறிப்பாக அதிக லோக்சபா தொகுதிகளைக் கொண்ட இரண்டு முக்கிய மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய முடியாமல் திணறி வருகிறது.
மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை. அங்கே திரிணாமுல் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, காங்கிரஸுடன் சீட் பங்கீடு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்திய நிலையில், அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு சுமார் 10 இடங்களைக் கேட்டுள்ளனர். ஆனால் திரிணாமுல் இரண்டு இடங்களை மட்டுமே தருவோம் எனக் கூறியுள்ளது.
தொடரும் மோதல்: காங்கிரஸின் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே வார்த்தை மோதலும் தொடர்ந்து வருகிறது. மம்தா பானர்ஜியை "சந்தர்ப்பவாதி" என்று ஆதிர் ரஞ்சன் சௌத்ரி என விமர்சித்துள்ளார். அதேநேரம் திரிணாமுல் முன்மொழிந்த அனைத்து திட்டங்களையும் காங்கிரஸ் நிராகரித்துவிட்டதாகவும் இதனால் தனித்துப் போட்டியிட உள்ளதாகவும் கூறி மம்தா பதிலடி கொடுத்துள்ளார்.
ஒரு பக்கம் டெல்லி காங்கிரஸ் தலைமை மம்தாவை கூட்டணிக்குள் கொண்டு வர முயன்றாலும் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி தொடர்ந்து மம்தாவை விமர்சிக்கிறார். இந்த வார்த்தை மோதல் காரணமாகச் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் கூட மம்தா பானர்ஜி கலந்து கொள்ளவில்லை.
மகாராஷ்டிரா: அதேபோல மகாராஷ்டிராவிலும் குழப்பம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அங்கே காங்கிரஸ், சிவசேனா (தாக்கரே) மற்றும் என்சிபி (ஷரத் பவார்) இடையே மகா விகாஸ் அகாடி கூட்டணி உள்ளது. அங்கும் கூட சில இடங்களில் இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை. மகாராஷ்டிராவில் மொத்தம் 48 இடங்கள் இருக்கும் நிலையில், அதில் 18 இடங்களில் போட்டியிட சிவசேனா விரும்புகிறது. குறிப்பாக மும்பையில் உள்ள 6 தொகுதிகளில் 3இல் போட்டியிட விரும்புகிறார்கள். இதில் தான் இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை என தெரிகிறது.
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ராகுல் காந்தியே நேரடியாக தாக்ரே மற்றும் சரத் பவார் ஆகியோருடன் தொலைப்பேசி வாயிலாக உரையாடினார். இன்னும் சில நாட்களில் அங்கே இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு ஏற்படும் எனத் தெரிகிறது. ஆனால், அங்கே அதை விடச் சவால் என்னவென்றால் தாக்ரே தரப்பு சிவசேனாவுக்கும் சரத் பவாரின் என்சிபி கட்சிக்கும் புதிய சின்னம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாகப் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே பெரிய சவாலாக இருக்கும்.












Click it and Unblock the Notifications